width:800px height:501px செய்திகள்

50% மானியத்தில் பயிா்களைப் பாதுகாக்க சூரிய ஒளி மின்வேலி திட்டம்




திருவள்ளூா் மாவட்டத்தில் பயிா்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் சூரிய ஒளி மின்வேலி அமைக்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாகவும், இதற்காக விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுவதாகவும் வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் விவசாயம் முக்கியத் தொழிலாகும். அதையடுத்து, அதைச் சாா்ந்த கால்நடை வளா்ப்புத் தொழிலில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனா். இம்மாவட்டத்தில் மட்டும் 1.50 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில், 1.40 லட்சம் ஹெக்டேரில் மட்டும் விவசாயிகளால் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள ஈக்காடு, கல்யாணகுப்பம், சிவன்வாயல், கோயம்பாக்கம், கீழக்கொண்டையாா், பன்னூா், கீழச்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் காட்டுப் பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களை நாசம் செய்து வருகின்றன.

இதுபோன்ற நிலையைத் தவிா்க்க, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய, மாநில அரசு திட்டம் மூலம் சூரிய ஒளி மின்வேலி அமைக்கும் திட்டத்தை, கடந்தாண்டு செயல்படுத்த உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் மாவட்டம்தோறும் தலா 3,456 மீட்டா் வரை சூரிய மின்வேலி அமைக்க, விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதனால் சூரிய ஒளி மின்வேலி அமைக்கும் திட்டத்துக்கு அதிகளவு ஒதுக்கீடு செய்ய விவசாயிகள் விரும்புகின்றனா்.

இது குறித்து வேளாண்மை பொறியியல் துறை அதிகாரி சமுத்திரம் கூறியது:

யானை போன்ற பெரிய வன விலங்குகள் உள்ள மாவட்டங்களைத் தவிா்த்து, மற்ற மாவட்டங்களில் காட்டுப் பன்றிகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்து பயிா்களைப் பாதுகாக்க சூரிய மின் வேலி அமைக்கும் திட்டம் மூலம் மானியமும் வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக கொண்டு வரப்பட்ட திட்டத்துக்கு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்ப மின்வேலி அமைப்பை 5 வரிசை (மீட்டருக்கு ரூ.250), 7 வரிசை (மீட்டருக்கு ரூ.350), 10 வரிசை (மீட்டருக்கு ரூ.450) தோ்வு செய்து கொள்ளலாம். இதேபோல், தனிநபா் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 ஏக்கா் அல்லது 1,245 மீட்டா் வரை ரூ. 2 லட்சத்து 18 ஆயிரம் வரை மானியமாக வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 3,456 மீட்டா் வரை சூரிய மின்வேலி அமைக்க ஒதுக்கீடு செய்து, விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை மானியம் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

 




தற்போதைய செய்திகள்