கொத்தவரை, ஆப்பிரிக்க காட்டு வகை செடியிலிருந்து மேம்பட்ட ஒரு வகை தாவரம் ஆகும். உண்ணக்கூடிய ஒரு காயாக இனம் கண்டு பயன்படுத்தியது இந்தியா மற்றும் பாக்கிஸ்தான். குறிப்பாக இந்திய-பாக்கிஸ்தான் எல்லைப் பகுதியான ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப் படுகிறது.
சமையலுக்காகப் பயன்படுத்துவதைக் காட்டிலும் கொத்தவரை விதையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கார் பிசின் உணவுத்தயாரிப்பு தொழிலில் முக்கிய சேர்க்கைப் பொருளாகவும், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளிலும் பயன்படுகிறது.
அதனாலயே இன்று இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பணப்பயிர்களில் முக்கியமானதாக கொத்தவரங்காய் உள்ளது.
இரகங்கள்
பூசா மவுசாமி, பூசா நவுபகார், பூசா சதபாகர் மற்றும் கோமா மஞ்சரி ஆகிய இரகங்கள் உள்ளன.
பருவம்
ஜூன் – ஜூலை, அக்டோபர் – நவம்பர் மாதங்கள் ஏற்ற பருவம் ஆகும்.
மண்
நல்ல வடிகால் வசதியுடைய மணற்பாங்கான மண் (அ) வண்டல் மண் ஏற்றது. மண்ணின் கார அமிலத்தன்மை 7.5-8.0 வரை இருத்தல் வேண்டும். உவர்ப்பு நிலங்களில் வளரும் தன்மையுடையது.
நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். பின் பார்சால்களை 45 செ.மீ இடைவெளியில் அமைக்க வேண்டும்.
விதையளவு
ஒரு எக்டருக்கு 10 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.
விதை நேர்த்தி
ஆறிய அரிசி கஞ்சியில் 600 கிராம் ரைசோபியம் நுண்ணுயிர் கலவைக்கொண்டு நேர்த்தி செய்யவேண்டும். விதைக்கும் முன்னர் 15-30 நிமிடம் நிழலில் உலர்த்தவேண்டும்.
விதைத்தல்
விதைநேர்த்தி செய்த விதைகளை பார்களின் பக்கவாட்டில் 15 செ.மீ இடைவெளியில் ஊன்றவேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைகளை ஊன்றியவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மண்ணின் தன்மைக்கேற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.
கொத்தவரங்காய் உரங்கள்
கடைசி உழவின் போது ஒரு எக்டருக்கு மக்கிய தொழு உரம் 25 டன், அசோஸ்பைரில்லம் 2 கிலோ, பாஸ்போபேக்டீரியா 2 கிலோ, தழைச்சத்து 50 கிலோ, 50 கிலோ மணிச்சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்து ஆகியவற்றை அடியுரமாக இடவேண்டும். நடவு செய்த 30வது நாளில் ஒரு எக்டருக்கு 20 கிலோ தழைச்சத்தினை மேலுரமாக இடவேண்டும்.
கொத்தவரங்காய் பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும்.
இலை தத்துப்பூச்சி
இலை தத்துப்பூச்சியை கட்டுப்படுத்த மீத்தைல் டெமட்டான் 25 இசி 1 மில்லி (அ) டைமெத்தோயேட் 30 இசி 1 மில்லி மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
காய்ப்புழு
காய்ப்புழுவை கட்டுப்படுத்த காரரைல் 2 கிராம் (அ) என்டோசல்பான் 2 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இலைப்புள்ளி நோய்
இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த மேங்கோசிப் 2 கிராம் என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
சாம்பல் நோய்
சாம்பல் நோயை கட்டுப்படுத்த 15 நாட்களுக்கொரு முறை நனையும் கந்தகத் தூள் 2 கிராம் என்ற அளவில் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை
காய்களை முற்றி விடாமல் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும்.
மகசூல்
விதைத்த 90 நாட்களில் 5-7 டன்கள் வரை மகசூல் கிடைக்கும்.
