width:470px height:300px காய்கறிகள்

பாகற்காய் சாகுபடி




கொடி வகையைச் சேர்ந்த பாகற்காய் வெப்பப்பிரதேச காயாகும். பாகற்காயானது கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைப்படும். இதன் சுவை கசப்பாக இருந்தாலும், எண்ணற்ற மருத்துவ குணங்களை அடங்கியுள்ளது. முதலில் இது தன்னிச்சையாக வளர்ந்து கிடந்தது. வறட்சி காலத்தில் வேறு உணவு கிடைக்காதபோது இதை உண்டனர்.

பாகற்காய் முற்றிப் பழுக்க ஆரம்பித்ததும் மஞ்சளாகி பின் சிவப்பாக மாறும். முற்றியதும் காய் வெடித்து தோல் மூன்று பாகங்களாகி மேல்நோக்கி சுருண்டிருக்கும். செராசி என்ற காட்டு பாகற்காயில் ஒருவகை பிசின் இருக்கும். அதை மெழுகுவர்த்தி செய்யப் பயன்படுத்துவார்கள். இக்கொடி வெள்ளரிக்காய், பூசணிக்காய், முதலான நிலைத்திணை வகைகளை உள்ளடக்கிய குக்குர்பிட்டேசியே என்னும் கொடி குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.

பாகற்காயின் தாயகம் இந்தியா ஆகும். இந்தியாவிலிருந்து, சீனாவிற்கு 14 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப் பட்டது.

பாகற்காய் எப்படி பயிரிடுவது…?

கோ 1, எம்.டி.யூ. 1, அர்காஹரித், ப்ரியா, பிரீத்தி, கோபிஜிஎச்1, என்.எஸ். 244, என்.எஸ். 453, யு.எஸ் 6214, யு.எஸ். 390, அபிஷேக் ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு உகந்தவை.

ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலம் சாகுபடிக்கு ஏற்ற பருவமாகும்.

அங்ககச் சத்து கொண்ட, கார அமிலத்தன்மை கொண்ட நல்ல மண் கொண்ட மணற்சாரி வண்டல் மண் ஏற்றது.

தேர்வு செய்த நிலத்தை மூன்று முறை நன்கு உழுது, கட்டிகள் இல்லாமல் நிலத்தை நன்கு சமன்படுத்தி கொள்ள வேண்டும். கடைசி உழவின் போது அடியுரமாக தொழு உரம் இட்டு உழவு செய்ய வேண்டும்.

பாகற்காயைப் பொருத்தவரை ஏக்கருக்கு 1 கிலோ 800 கிராம் விதை தேவைப்படும்.

ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் டிரைகோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் ப்ளுரோசன்ஸ் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

வரிசைக்கு வரிசை 2 மீட்டர், குழிக்கு குழி 1.5 மீட்டர் இடைவெளி விட்டு குழிக்கு 5 விதைகள் ஊன்ற வேண்டும்.

நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் வாரம் ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதுமானது.

ஏக்கருக்கு 10 கிலோ தொழு உரம், 15 கிராம் யூரியா, 75 கிராம் சூப்பர் பாஸ்பேட், 20 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை கலந்து குழிக்கு அடியுரமாக இடவேண்டும். விதைத்த 30-ஆம் நாள் குழிக்கு 20 கிராம் யூரியா மேலுரமாக இடவேண்டும்.

குழிக்கு 2 செடிகள் விட்டு 15-ஆம் நாள் கலைத்துவிட வேண்டும். கொடிகள் படர கல்தூண்கள், கம்பிகள் கொண்டு இரண்டு மீட்டர் உயரத்தில் முறையாகப் பந்தல் அமைக்க வேண்டும். செடி வளரும் பருவத்தில் மூன்று முறை தவறாமல் களை எடுக்க வேண்டும்.

விதைத்த 60-65 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். அதன் பிறகு வாரம் ஒருமுறை அறுவடை செய்யலாம். விதைகள் முதிர்ச்சியடைய ஆரம்பிக்கும் முன்பே காய்களை அறுவடை செய்யவேண்டும்.

எக்டருக்கு 140 – 150 நாட்களில் 14 டன் காய்கள் வரை கிடைக்கும்.

பந்தல் முறையில் பீர்க்கங்காய், புடலங்காய் ஆகியவற்றை ஊடுபயிராக பயிர் செய்யலாம்.




தற்போதைய செய்திகள்