வெண்டைக்காய் பருத்தி செடியின் குடும்பத்தை சார்ந்தது. வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தோப்பியா நாடு. அங்கிருந்து தான் அரேபியா,நைல் நதியோர நாடுகள், இந்தியாவிற்கு பரவியதாக கருதப்படுகிறது. கி.பி 1600 களில் தான் ஆப்பிரிக்கர்கள் இதை அமெரிக்கா,ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
வெண்டை வெப்பத்தை விரும்பும் பயிர். நீண்ட நேர வெப்ப நாட்கள் இதற்குத் தேவை. பனி மூட்டங்களால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும். குளிர் காலங்களிலும், குளிர் பிரதேசங்களிலும் பெண்டைக்காயின் வளர்ச்சி குறைவாகவே காணப்படும்.
அனைத்து விதமான மண் வகைகளும் வெண்டைக்காய் உற்பத்திக்கு சிறந்தது. நல்ல உர சத்துள்ள நிலங்களில் மிகவும் நன்றாக விளையக்கூடியது. கார அமில தன்மையை தாங்கிக்கொண்டு வளரும் தன்மை உடையது. இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் அதிக அளவு பயிரிடப்படும் காய்கறிகளில் வெண்டைக்காயும் ஒன்று.
இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும்,நீளமாகவும்,நுனி கூராகவும் இருப்பதால் ஆங்கிலத்தில் இதை லேடீஸ் பிங்கர் என்கிறார்கள்.
பயிரிடும் முறை:
ஜூன் – ஜூலை மற்றும் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் பயிர் செய்யலாம்.
பயிரிடப்படும் நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழ வேண்டும். அதில் 25 டன் தொழு உரத்தை இட்டு நன்கு உழுது நிலத்தை சமன்படுத்திக்கொள்ளவேண்டும். பின்பு 50 செ.மீ இடைவெளிகளில் பாத்தி அமைக்கவேண்டும்.
ஒரு ஹெக்டர்க்கு 8 கிலோ விதைகள் தேவைப்படும்.
பின்பு பாதிக்களுக்கு நீர் பாய்த்துக்கொண்டு 30 செ.மீ இடைவெளிகளில் 4 விதைகள் வீதம் 2 செ.மீ ஆழத்திற்கு ஊன்றி நாடா வேண்டும். 10 நாட்களுக்கு பின்பு நன்கு வளர்ந்த இரண்டு ஆரோக்கியமான செடிகளை விட்டுவிட்டு மீதி செடிகளை அகற்றி விட வேண்டும்.
வாரத்திற்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதும். நன்கு விளைச்சலை தரும்.
அடியுரமாக 20 கிலோ தழைச்சத்து மற்றும் 50 கிலோ சாம்பல் சத்து உரங்களை நன்கு கலந்து பாதைகளின் பக்கவாட்டில் தூவி விட்டு நீர் பாய்ச்ச வேண்டும். செயற்கை உரங்களை விட இயற்கை உரங்களை மாதத்திற்கு ஒருமுறை உபயோகித்தால் நல்ல விளைச்சலை தரும்.
45 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை காய்கள் முற்றுவதற்கு முன் அறுவடை செய்து விடுவது நல்லது.
