width:710px height:400px தானியங்கள்

துவரை சாகுபடி




தமிழர் சமையலிலும், துவரம் பருப்பு முக்கிய உணவுப்பொருளாக அமைந்துள்ளது. இப்பயிரானது தனிப்பயிராகவும், கலப்புப் பயிராகவும், ஊடுபயிராகவும் பயிரிடப்படுகிறது.

 

இரகங்கள்

கோ(ஆர்.ஜி.) 7, எல்ஆர்ஜி.41, வம்பன் 2, 3, பி.எஸ்.ஆர்.1, ஏபிகே 1, கோ 6 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை ஆகும்.

பருவம்

ஆடிப்பட்டம், புரட்டாசிப்பட்டம் மற்றும் கோடைப்பருவகாலங்களில் துவரை பொதுவாக சாகுபடி செய்யப்பட்டாலும், ஆடிப்பட்டத்தின் சாகுபடி பரப்பு அதிகமாக உள்ளது.

மண்

செம்மண்ணில் நன்கு வளரும் தன்மை கொண்டது.

நிலம் தயாரித்தல்

துவரை நடவு செய்வதற்கு முன் நன்கு மக்கிய எருவை ஏக்கருக்கு 5 டன் அல்லது மண்புழு உரம் ஏக்கருக்கு 2.5 டன் என்ற அளவில் அடியுரமாக இட்டு உழவு செய்ய வேண்டும்.

இறவை, மானாவாரியில் தனிப்பயிர் சாகுபடிக்கு 15 செ.மீ அளவுள்ள குழிகளை 5 x 3 அடி இடைவெளியிலும் (2904 செடிகள்/ஏக்கர்) நடவுப்பயிர் சாகுபடி செய்யக்கூடிய இடங்களில் 6 x 3 அடி இடைவெளியிலும் (2420 செடிகள்/ஏக்கர்) குழிகள் எடுக்கவேண்டும்.

விதையளவு

இரகங்களை பொறுத்து விதையின் அளவானது வேறுபடும். கோ 6, வம்பன் 2, எல்.ஆர்.ஜி 41 ஆகிய இரகங்களுக்கு தனிப்பயிராக 8 கிலோவும், கலப்புபயிறுக்கு 3 கிலோ விதையும் தேவைப்படும். கோ(துவரை) 7, வம்பன் (துவரை) 3, ஏபிகே 1 ஆகிய இரகங்களுக்கு தனிப்பயிராக 15 கிலோவும், கலப்புபயிறுக்கு 5 கிலோ விதையும் தேவைப்படும்.

நாற்றங்கால் தயாரித்தல்

துவரை நடவு செய்வதற்குத் தேவையான நாற்றங்காலை குழித்தட்டு மற்றும் பாலித்தீன் பைகளில் வளர்த்து நடவு செய்யலாம். குழித்தட்டு நாற்றங்கால் முறையில் 200 காஜ் கருப்பு நிற குழித்தட்டுகள் அமைத்து, அக்குழிகளில் மக்கிய தென்னை நார்க் கழிவுகள் மற்றும் மணல் நிரப்ப வேண்டும். தட்டில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி வேர்கள் அழுகி விடாமல் இருக்க 3 முதல் 4 துளைகள் போட வேண்டும்.

இக்குழித் தட்டுகளில் 90 சதவீதம் பரப்பியுள்ள தென்னைநார் மற்றும் மணலில் குழி ஒன்றில் இரண்டு விதைகளை ஊன்ற வேண்டும். முளைத்த 10ஆம் நாளில் வீரியமான நாற்றை மட்டும் வைத்துவிட்டு, வலுவிழந்த நாற்றினை நீக்கி, ஒரு குழியில் ஒரு நாற்று மட்டும் இருக்குமாறு செய்ய வேண்டும். இவ்வாறு விதைப்பு செய்யப்பட்ட பைகள் நிழலான இடங்களில் வைத்து 30-40 நாட்கள் பராமரிக்கப்பட்டு நடவுக்கு பயன்படுத்தப்படுகின்றன. நடுவதற்கு சில நாட்களுக்கு முன் இளம் வெயிலில் நாற்றுக்களை வைத்து கடினப்படுத்தி பின் நடவு செய்வது நல்லது.

விதைத்தல்

நாற்றுக்களை நடுவதற்கு 15 நாட்களுக்கு முன் குழிகளை மண், எருவைக் கொண்டு நிரப்பி ஒரு குழிக்கு ஒரு செடி வீதம் நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

நடவு செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பின் மண்ணின் ஈரத்திற்கேற்ப 3-4 முறை பாசனம் செய்யப்படுகின்றது. நடவு செய்த 30ஆம் நாள் ஜீவாமிர்த கரைசல் தர வேண்டும். பூக்கும் தருணத்தில் பஞ்சகாவ்யா கரைசலை இலை வழியாக 15 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். இதனால் அதிக எண்ணிக்கையில் காய்கள் உருவாகும்.

துவரை உரங்கள்

நடவு நட்ட 20 முதல் 30 நாட்கள் கழித்து மண் அணைப்பதற்கு முன் ஏக்கருக்கு 10:23:50 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்களை அளிக்கும் வகையில் டி.ஏ.பி., பொட்டாஷ் உரங்களும், துத்தநாகம், கந்தகச் சத்து அளிக்கும் துத்தநாக சல்பேட் (10 கிலோ) உரங்களும் செடியைச் சுற்றி இடுவதால் நல்ல விளைச்சல் கிடைக்கும். உரம் அளித்த உடன் உடனடியாக நீர் பாய்ச்ச வேண்டும்.

களை நிர்வாகம்

நடவு செய்த 30-40 நாட்கள் வரை களையின்றி பராமரிக்க வேண்டும். நடவுப்பயிர்களில் கிளைகள் அதிக எண்ணிக்கைகளில் தோன்றுவதால் செடிகள் சாயாமல் இருக்க மண் அணைத்து பராமரிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

நடவு செய்த 20-30 நாட்கள் கழித்து 5-6 செ.மீ. அளவுக்கு நுனி குருத்தைக் கிள்ளி விடவேண்டும். பூ உதிராமல் தடுக்க பிளானோபிக்ஸ் ஊக்கியை பூக்கும் காலத்தில் 0.5 மி.லி./லிட்டர் தண்ணீர் பயன்படுத்த வேண்டும்.

சோள விதைகளை துவரை வயலில் விதைத்து பறவைகள் அமர்வதற்கு ஏதுவாக வழிவகை செய்வது பூச்சிக் கட்டுப்பாட்டிற்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

சரியான நேரத்தில் மண் அணைத்துக் கொடுக்க வேண்டும். பூச்சிகள் ஏதேனும் தென்பட்டால், வேப்பம் கொட்டை கரைசல், மற்றும் பூண்டு கரைசல் ஆகியவற்றை தெளிக்க வேண்டும்.

அறுவடை

காய் 80% முதிர்ந்தவுடன் முழு பயிரையும் அறுவடை செய்ய வேண்டும். 2 – 3 நாட்களுக்கு குவியலாக வைத்திருந்து பின்பு உலர்த்த வேண்டும்.

மகசூல்

மானாவாரியில் ஏக்கருக்கு 400 கிலோ, இறவையில் 600 கிலோ மகசூல் கிடைக்கும்.




Site For Sale Contact : 9894832938