மத்திய கிழக்கை பூர்வீகமாகக் கொண்ட இந்தக் கீரை இன்று உலகின் பல பாகங்களிலும் பயிரிடப்படுகிறது.முளைக்கீரையானது பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் காணப்படுகின்றது.மிதமண்டல மற்றும் வெப்ப மண்டல நாடுகளில் இக்கீரை நன்றாக வளர்கிறது.முளைக்கீரை சாதாரணமாக இந்தியாவில் எங்கும் பயிரிடப்படும் கீரையாகும்.
பருவம்
இதனை ஆண்டு முழுவது பயிர் செய்யலாம். சித்திரை, ஆடி, மார்கழி, மாசிப்பட்டம் ஏற்ற பருவம் ஆகும்.
மண்
நல்ல மண்ணும், மணலும் கலந்த சற்றே அமிலத்தன்மை கொண்ட இருமண் பாட்டு நிலம், செம்மண் நிலம் கீரை சாகுபடிக்கு உகந்தது. அதிக களிமண் மற்றும் முற்றிலும் மணல் கொண்ட நிலத்தை தவிர்க்கவேண்டும்.
விதையளவு
ஒரு எக்டருக்கு 2.5 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.
நிலம் தயாரித்தல்
தேர்வு செய்த நிலத்தில் ஏக்கருக்கு 5 டன் தொழு உரம், 4 டன் எருவைக் கலந்து பரவலாகக் கொட்டி உழவு செய்து மண்ணை பண்படுத்த வேண்டும். பிறகு தேவையான அளவு பாத்திகள் அமைக்க வேண்டும்.
விதைத்தல்
கீரை விதைகளோடு மணல் கலந்து பாத்திகளில் தூவி விட வேண்டும். பின் கையால் கிளறி பாசனம் செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைகளை விதைத்தவுடன் நீர்ப்பாய்ச்ச வேண்டும். விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் கவனமாக நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
உரங்கள்
ஜீவாமிர்தக் கரைசலை 7 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை பாசன நீரில் கலந்து விடவேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
ஒரு வார காலத்தில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். 10 -15 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். பயிரின் எண்ணிக்கையை பொறுத்து பயிர் களைதல் வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
பூச்சி தாக்குதல்
கீரைகளில் பூச்சிகள் தாக்குதல் காணப்பட்டால் இஞ்சி, பூண்டு கரைசலை தெளிக்க வேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவில் எடுத்து, இடித்து ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, 10 நாட்களுக்கு ஒரு முறை அதிகாலை வேளையில் தெளிக்க வேண்டும்.
அறுவடை
விதைத்த 20-25 நாட்களில் கீரைகளை வேருடன் பறிக்கவேண்டும். கீரைகள் நன்கு முற்றிவிடாமல் சரியான பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும்.
