width:500px height:330px கீரைகள்

மணத்தக்காளி சாகுபடி




பலராலும் விரும்பிச் சாப்பிடப்படும் கீரை வகைகளில் இம்மூலிகையும் ஒன்று. வெப்ப மண்டல நாடுகளில் மிகுதியாகக் காணப்படுகிறது. தமிழகத்தில் மணற்பாங்கான மற்றும் கரிசல் மண் பூமிகளில் உள்ளது.

பூக்கள் வெண்மையாய் இருக்கும். காய்கள் கருமையாகவும், கரும்பச்சையாகவும் காணப்படும். பழுக்கும்போது சிவப்பு, மஞ்சள், கருப்பு ஆகிய நிறங்களோடு இருக்கும். இதனுடைய இலை, தண்டு, கனி எல்லாவற்றையும் உணவு மற்றும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.

பருவம்

அனைத்து பருவத்திலும் பயிர் செய்யலாம். டிசம்பர் மாதம் ஏற்ற பருவம் ஆகும்.

மண்

மணல் தவிர்த்து எல்லா வகை மண்ணிலும் வளரும்.

விதையளவு

விதைகள் மூலமே இது உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.

நாற்றங்கால் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழுது பாத்திகள் அமைக்க வேண்டும். பழங்களை காயவைத்து விதைகள் சேகரித்து சாம்பலுடன் கலந்து பாத்திகளில் விதைகளை சீராக தூவ வேண்டும்.

நிலம் தயாரித்தல்

ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழுவுரத்துடன், 4 டன் எருவைக் கலந்து பரவலாகக் கொட்டி உழவு செய்ய வேண்டும். பின் அதில் தேவையான அளவு பாத்திகள் அமைக்க வேண்டும்.

நடவு செய்தல்

கன்றுகள் 30 செ.மீ x 45 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நட்ட செடிகள் மூன்று மாத இடைவெளியில் 120 செ.மீ வரை வளர்ந்து விடும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். மண்ணின் ஈரப்பதத்திற்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும். பயிரில் பூ அரும்பும் வரை பாசனம் செய்ய வேண்டும். பாசனம் செய்யும் போது ஜீவாமிர்தக் கரைசலை கலந்து விடுவதால் நோய் தாக்கும் அபாயம் குறையும்.

உரங்கள்

ஒரு எக்டருக்கு தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 40 கிலோ மற்றும் சாம்பல் சத்து 40 கிலோ கொடுக்கக்கூடிய உரங்களை அளிக்க வேண்டும். சாம்பல் சத்து முழுவதையும் அடியுரமாக அளிக்க வேண்டும். தழை மற்றும் மணிச்சத்தை 2 அல்லது 3 பிரிவுகளாக பிரித்து அளிக்க வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

களை வளருவதால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. எனவே செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். செடி நட்ட 15-20 நாட்களுக்குள் களை எடுக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

கீரையின் இலையும், தண்டும் உணவாக உட்கொள்ளும் பகுதிகள். இவற்றின் மீது பூச்சிமருந்து தெளிப்பதை தவிர்க்க வேண்டும்.

இலை உண்ணும் புழுக்கள்

இலை உண்ணும் புழுக்கள் தோன்றும் போதே, ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும். அத்துடன் காதி சோப்பை சேர்ப்பதால், அது நீரையும் எண்ணையையும் ஒட்டும் திரவமாக பயன்படும்.

அறுவடை

30 நாட்களில் கீரைகளை அறுவடை செய்யலாம்.

மருத்துவ பயன்பாட்டிற்கு செடிகளை வேருடன் பறித்து, வேர் பாகம் தவிர்த்து மேல் பகுதிகளான இலை, தண்டு முதலியன துண்டு துண்டாக வெட்டி காய வைக்க வேண்டும்.

காய வைப்பதற்கு முன் பழங்களை பறித்து விடுவதன் மூலம் விரைவாக காயவும் மற்றும் பூஞ்சாணம் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

மூன்று நாட்கள் வரை நன்கு காய்ந்தபின் சாக்கு பைகளில் நிரப்ப வேண்டும். காய்ந்த செடியில் ஈரப்பதம் 8% மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மகசூல்

ஒரு ஏக்கருக்கு 1000-1500 கிலோ வரை காய்ந்த மகசூல் கிடைக்கும்.

 




Site For Sale Contact : 9894832938