width:954px height:371px பூக்கள்

ஜாதிமல்லி சாகுபடி முறைகள்




ஜாதி மல்லி மிகவும் வாசனை நிறைந்த பூக்களில் ஒன்று. அதேபோல் ஜாதி மல்லிக்கு எப்பொழுதும் மார்க்கெட்டில் அதிகளவு வரவேற்பு உண்டு. அதிலும் சந்தையில் அதிக விலையில் விற்பனையாகும் பூக்களும் ஜாதி மல்லி பூக்கள் தான். பெண்கள் அதிகம் விரும்பும் பூக்களும் இந்த ஜாதி மல்லி பூக்களைத்தான்.

எனவே நீங்கள் இப்பொழுது விவசாயம் செய்ய  விரும்பினால், ஜாதிமல்லி சாகுபடி செய்தால் நல்ல வருமானம் பெறலாம். இந்த பூவினை பிச்சிப்பூ என்றும் சொல்வார்கள்.

மண்:

நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த செம்மண் மற்றும் வண்டல் மண் ஏற்றது. களர், உவர் நிலங்கள் ஜாதிமல்லி சாகுபடி முறைக்கு உகந்தவை அல்ல. போதிய அளவு தண்ணீர் வசதியும், சூரிய வெளிச்சமும் இதன் வளர்ச்சிக்கு முக்கியத் தேவையாகும்.

இரகங்கள்:

கோ 1 பிச்சிப் பூ
கோ 2 பிச்சிப் பூ

ஏதாவது ஒன்றைப் பயிரிடுங்கள் இரண்டையும் கூட பயிரிடலாம்.

பருவம்:

ஜாதிமல்லி சாகுபடி பொறுத்தவரை ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதங்கள் வரை ஜாதிமல்லி சாகுபடி செய்யப்படுகிறது.

நிலம் தயாரிப்பு:

ஜாதிமல்லி சாகுபடி பொறுத்தவரை நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது 30செ.மீ நீளம், அகலம் மற்றும் ஆழம் உள்ள குழிகள் எடுத்து ஒரு மாதம் ஆறவிடவேண்டும். ஒவ்வொரு குழிகளுக்கும் 10 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் இட வேண்டும்.

 

பதியங்களைத் தயார் செய்தல்:

பென்சில் பருமனுள்ள நன்றாக முற்றிய தண்டுகளை ஒரு கத்தி கொண்டு தண்டின் ஒரு பகுதியில் இலேசாக மேல் பட்டையைச் சீவி நீக்கிய பின்னர் அத்தண்டினை வளைத்து வெட்டிய பாகத்தினை மண்ணில் புதைக்கவேண்டும்.

பிறகு நீர் பாய்ச்ச வேண்டும். சீவப்பட்ட பகுதியிலிருந்து சல்லி வேர்கள் தோன்றும்.

மூன்று மாதங்கள் கழித்து பதியன்களை வேர்கள் சேதமடையாமல், மண்ணிலிருந்து எடுத்து, நடவிற்க்கு பயன்படுத்தலாம். நுனிக்குச்சிகளைப் பதியன்களாகத் தயாரித்து பனி அறையில் நட்டு எளிதில் வேர் பிடிக்கச் செய்யலாம்.

வளர்ச்சி ஊக்கிகளான இண்டோல் அசிடிக் அமிலம் மற்றும் இண்டோல் ப்யூரிட்டிக் அமிலம்500 முதல் 1000 பிபிஎம் என்ற அளவில் பயன்படுத்தி வேர் பிடித்தலைத் துரிதப்படுத்தலாம். இம்முறையில் 45 நாட்களில் வேர்கள் தோன்றும்.

நடவு:

ஜாதிமல்லி சாகுபடி பொறுத்தவரை வேர் வந்த பதியங்களை தனி செடியில் இருந்து பறித்ததும், குழியின் மத்தில் நடவேண்டும். குறிப்பாக மழைக்காலங்களில் நடவேண்டும்.

 

ஊட்டச்சத்து மேலாண்மை:

ஜாதிமல்லி செடி சாகுபடி பொறுத்தவரை செடிகள் ஒன்றுக்கு 10 கிலோ தொழு உரத்துடன், 60கிராம் தழைச்சத்து, 120 மணிச்சத்து மற்றும் 120 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய இரசாயண உரங்களை ஆண்டிற்கு இருமுறை இரண்டாக பிரித்து இடவேண்டும்.

அதாவது டிசம்பர் மாதம் காவந்து செய்த பிறகு ஒரு முறையும், பின்பு ஜூன், ஜூலை மாதங்களில் ஒருமுறையும் என்று இரண்டு பிரிவுகளாக பிரித்து உரம் இடவேண்டும்.

களை நிர்வாகம் :

ஜாதிமல்லி பூ சாகுபடி பொறுத்தவரை செடிகளை வருடம் ஒரு முறை அதாவது டிசம்பர் கடைசி வாரத்தில் கவாத்து செய்யவேண்டும். தரை மட்டத்திலிருந்த 45 செ.மீ உயரம் வரை வெட்டிவிடவேண்டும். செடிகளை குத்துச்செடிகளாக வளர்க்கவேண்டும். படரவிடக்கூடாது. செடிகள் நடவு செய்து ஓராண்டு கழித்து முதல் முறையாக கவாத்து செய்யவேண்டும்.

நீர் நிர்வாகம்:

ஜாதிமல்லி செடி சாகுபடி பொறுத்தவரை நடவு செய்தவுடன் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். அதன் பிறகு 10 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதும்.

பயிர் பாதுகாப்பு:

மொட்டுப்புழு :

ஜாதிமல்லி பூ பயிரிடும் முறையில் மொட்டுப்புழு தாக்குதல்கள் இருக்கும், அதற்கு மானோகுரோட்டோபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

சிவப்பு சிலந்தி பூச்சி:

அதேபோல் ஜாதிமல்லி செடி பயிரிடும் முறையில் சிவப்பு சிலந்தி பூச்சி தாக்குதல்கள் இருக்கும். அவற்றை கட்டுப்படுத்த நனையும் கந்தகம் 50 சத தூளை லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.

இலை வண்டு:

இவ்வண்டுகள் இலைகளின் பச்சையத்தை சுரண்டி உண்பதில் இலைகள் மஞ்சள் நிறமாகிப் பின் பழுத்து உதிர்ந்து விடும். மழை வந்த பிறகு விளக்குப் பொறி வைத்து வளர்த்த வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

இலைப்புள்ளி நோய்களுக்கு:

ஜாதிமல்லி பூ பயிரிடும் முறையில் அதிகமாக தாக்கக்கூடிய ஒன்றுதான் இலைப்புள்ளி நோய் ஆகும். ஆரம்பத்தில் இலைகளில் சிறுசிறு கரும்புள்ளிகள் தோன்றி பிறகு இலை முழுவதும் பரவிவிடும். தாக்கப்பட்ட இலைகள் நெருப்பால் கருகியதுபோல் காட்சி அளிக்கும். இந்நோயினை கட்டுப்படுத்த மான்கோசெப் மருந்தினை லிட்டருக்கு 2 கிராம் என்ற அளவில் தெளிக்கவேண்டும்.

அறுவடை:

மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்

மாதங்களில் அறுவடை செய்யுங்கள். விடியற்காலையில் மொட்டுக்களை பறியுங்கள்.

விரியாத வளர்ந்த மொட்டுக்களை பறியுங்கள்.

தாமதம் இல்லாமல் மொட்டுக்களை பறித்தவுடன் மார்க்கெட்டுக்கு விற்பனை செய்ய அனுப்புங்கள்.

மகசூல்:

ஜாதிமல்லி சாகுபடி பொத்தவரை ஒரு ஏக்கருக்கு 11 டன் பூ மொக்குகளை விளைச்சலாகப் பெறலாம்.

 




தற்போதைய செய்திகள்