பண்ருட்டியில் ஊரடங்கு உத்தரவால் பலாப்பழங்களை அறுவடை செய்ய தொழிலாளர்கள் யாரும் வராததால் மரத்திலேயே பழங்கள் பழுத்து தொங்குகின்றன.
தமிழகத்தில் பண்ருட்டி பலா பழத்துக்கு தனி மவுசு உண்டு. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் பலாப்பழ சீசன் களை கட்டும். இந்த ஆண்டு பலாப்பழம் சீசன் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. ஒரு பலாப்பழம் 100 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பலாப்பழம் அறுவடை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
அறுவடை செய்து வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதிக்காக வாகனங்களில் ஏற்றப்பட்ட பலாப்பழங்கள் புதுச்சேரி பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த பழங்கள் வீணாகி வருகின்றன. இதனால் சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலாப்பழ விவசாயி கூறியதாவது:-
ஊரடங்கு உத்தரவால் பலாப்பழங்களை அறுவடை செய்ய தொழிலாளர்கள் யாரும் வரவில்லை. சில இடங்களில் கூடுதல் கூலி கொடுத்து ஆட்களை வரவழைத்து, பலாப்பழங்களை அறுவடை செய்தோம். அந்த பழங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியாததால் இங்கேயே விற்பனை செய்கிறோம். விற்பனை மந்தமாக உள்ளதால், மேற்கொண்டு, அறுவடை செய்யாமல் விட்டு விட்டோம். இதனால் மரத்திலேயே பழங்கள் பழுத்து தொங்குகின்றன. இந்த ஆண்டு பலாப்பழம் விளைச்சல் அதகளவில் இருந்தும் விற்பனை செய்ய முடியாததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
