தமிழகத்தில், சுமார் 25,000 கறிக்கோழி பண்ணைகள் மூலம், தினமும், 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கொள்முதல் விலையை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு, தினமும் நிர்ணயம் செய்கிறது. தற்போது, கிலோ, ரூ.128 என, விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணை தலைவர், வாங்கிலி சுப்ரமணியம் தெரிவிக்கையில்: கரோனா பாதிப்பு காரணமாக, நுகர்வு சரிந்ததால், கறிக்கோழி உற்பத்தியை குறைத்துள்ளனர்.
வாரத்திற்கு, ஒரு கோடி உற்பத்தி என்ற நிலையிலிருந்து, தற்போது, 50 லட்சம் என பாதிக்குபாதி கோழிகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது நுகர்வு அதிகரிப்பால், 45 முதல், 48 நாட்களில் பிடிக்க வேண்டிய கோழியை, 35 நாட்களில் பிடிக்கின்றனர். வழக்கமாக, ஒரு கோழியின் எடை, 2.5 கிலோ வரை இருக்கும் நிலையில், தற்போது, 1.8 முதல், 2 கிலோ மட்டுமே உள்ளது. இதனால், கறிக்கோழி வரலாற்றில், முதல் முறையாக, கொள்முதல் விலை, ரூ.128 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, சில்லரை விலையில், கிலோ, ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
