கருணைக் கிழங்கு செடி ஒருமீட்டர் உயரம் வரை வளரும் ஒன்பது மாதப் பயிராகும்.கருணைக்கிழங்கு ஈரப்பதமுள்ள மிதவெப்பநிலையில் நன்கு வளரும்.
இக்கிழங்கினை காரும் கருணைகிழங்கு எனவும் கூறுவர். இந்த கிழங்கினை சாதாரணமாக சமைத்து சாப்பிட்டால் நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும். அதனால் இக்கிழங்கை நன்றாக வேகவைத்து, தோலை உரித்து சமைக்க வேண்டும்.,
எப்படி பயிரிடுவது…?
இரகங்கள்
கோ 1, பஞ்சமுகி, கோவூர் (சத்முகி), பல்லவி, ரேஸ்மி ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்ற இரகங்கள் ஆகும்.
பருவம்
ஜூன் – ஜூலை மற்றும் பிப்ரவரி – மார்ச் மாதங்கள் சாகுபடிக்கு ஏற்ற மாதங்கள் ஆகும்.
மண்
கரிசல் மண் மற்றும் செம்மண் நிலங்கள் சாகுபடிக்கு ஏற்றவை. ஈரப்பதமுள்ள மிதவெப்பநிலையில் நன்கு வளரும் தன்மை கொண்டது.
நிலம் தயாரித்தல்
இயற்கை முறையில் பயிரிட முதலில் ஆட்டுச் சாணம், காய்ந்த சருகுகள், மக்கிய இலைகள், பசுமாட்டு சாணம் ஆகியவற்றை சேர்த்து நிலத்தை நன்றாக உழுது பண்படுத்தி கொள்ள வேண்டும். கடைசி உழவின்போது மக்கிய தொழுஉரம் ஒரு எக்டருக்கு 25 டன் என்ற அளவில் இடவேண்டும்.
செயற்கை முறையில் பயிரிட தொழு உரத்துடன், தழைச்சத்து 20 கிலோ, மணிச்சத்து 30 கிலோ மற்றும் சாம்பல்சத்து 60 கிலோ ஆகியவற்றை அடியுரமாக இடவேண்டும். பின்னர் 45 செ.மீ இடைவெளியில் பார்சால் அமைக்க வேண்டும்.
விதையளவு
ஒரு எக்டருக்கு 80 கிலோ விதைக்கிழங்குகள் தேவைப்படும்.
விதைத்தல்
நேரடியாகவே விதைக் கிழங்கை பயிரிடலாம் அல்லது முற்றின பருவத்தில் எடுத்த கிழங்குகளை முளைக்க வைத்தும் பின்னர் நடவு செய்யலாம். நடவு செய்யும் போது 2 X 2 என்ற இடைவெளியில் விதைகிழங்குகளை நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
கிழங்கை நட்டவுடன் உயிர்தண்ணீர் விட வேண்டும். பின்பு மண்ணின் ஈரப்பதத்திற்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்த 10 நாட்களில் முளைக்க ஆரம்பிக்கும்.
உரங்கள்
நடவு செய்த 45வது நாள் 20 கிலோ தழைச்சத்து, 30 கிலோ மணிச்சத்து மற்றும் 60 கிலோ சாம்பல் சத்து உரங்களை இடவேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
களை அதிகரிக்கும் போது களை எடுக்க வேண்டும். களை எடுத்த பின்பு மண் அணைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
இதில் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் குறைவு. புழு தாக்குதல் காணப்பட்டால் குளோரிபைரிபாஸ் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து செடிகளின் தண்டுப்பகுதியில் ஊற்றவேண்டும்.
அறுவடை
செடிகள் வளர்ந்து 8-9 மாதங்களில் கிழங்கு முற்றி பக்குவம் அடையும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவது அறுவடைக்கான அறிகுறியாகும். அத்தருணத்தில் தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட்டு, கிழங்குகளை அறுவடை செய்யவேண்டும். சாதாரணமான தட்பவெப்பநிலையில் அறுவடை செய்த கிழங்குகளை 6 மாதங்கள் வரை கெடாமல் பாதுகாக்கலாம்.
மகசூல்
ஒரு எக்டருக்கு 8-10 டன் கிழங்குகள் வரை மகசூல் கிடைக்கும்.
ஊடுபயிர்
வெங்காயம், மிளகாய் போன்ற பயிர்களை ஊடுபயிராகப் பயிரிடலாம்.
