width:585px height:346px பழங்கள்

பேரிக்காய் சாகுபடி




பேரிக்காய் ஆசியா மற்றும் ஐரோப்பா பகுதிகளை தாயகமாகக் கொண்டவை.சீனா,  ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் இது பெரிதும் பயிரிடப்படுகிறது.

கொடைக்கானல், மலைநாட்டுப் பகுதிகளிலும், இந்தோனேஷியா, இலங்கையின் உட்பட தென்கிழக்காசிய நாடுகளிலும் இது பயிரிடப்படுகிறது.

 

இரகங்கள் :

வில்லியம், கீஃபர், நாட்டு பேரீ, நியூ பேரீ மற்றும் ஜார்கோ நெலி போன்ற இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

மண்

நல்ல வடிகால் வசதியுடைய செம்மண் மற்றும் களிமண் நிலங்கள் பயிரிட ஏற்றது. மண்ணின் கார அமிலத்தன்மை 5.8 முதல் 6.2 வரை இருக்கவேண்டும்.

பருவம்

ஜீன் முதல் டிசம்பர் மாதம் வரை நடவுக்கு ஏற்ற பருவம் ஆகும்.

நிலம் தயாரித்தல்

சாகுபடிக்கு தேர்வு செய்த நிலத்தினை நன்கு உழுது சமன்படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு அதில் நீளம், அகலம் மற்றும் ஆழம் முறையே 60 செ.மீ x 60 செ.மீ x 60 செ.மீ அளவுள்ள குழிகளை எடுக்க வேண்டும். அதில் தொழுஉரத்தை மேல்மண்ணுடன் கலந்து இட்டு குழிகளை நிரப்பி ஆறவிட வேண்டும்.

விதை

நடவு செய்வதற்கு ஒட்டு கட்டிய செடிகள் மற்றும் வேர் பிடித்த குச்சிகளை பயன்படுத்த வேண்டும்.

விதைத்தல்

குழிகளுக்கிடையே உள்ள இடைவெளி 5 x 5 மீட்டர் அல்லது 6 x 6 மீட்டர் இருக்குமாறு கன்றுகளை குழியின் மத்தியில் நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். செடிகள் நன்கு வளரும் வரை வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மண்ணின் தன்மைக்கேற்ப நீர் பாய்ச்ச வேண்டியது அவசியம்.

உரங்கள்

காய்க்கும் மரங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 25 கிலோ தொழு உரம், 500 கிராம் தழைச்சத்து, 1 கிலோ சாம்பல் மற்றும் மணிச்சத்து அளிக்கவேண்டும். மேலும் 20 கிராம் யூரியாவை கலந்து அளிக்க வேண்டும். இதையே இரண்டாக பிரித்து அளிக்கலாம்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

செடிகளை சுற்றி களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கவாத்து செய்தல் மிகவும் அவசியம். மரங்கள் ஓரளவு வளர்ந்தவுடன் நடுக்கிளையின் நுனியை வெட்டி, பக்க கிளைகளின் வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

பேரிக்காயை அதிக பூச்சிகளோ, நோய்களோ தாக்குவது இல்லை. எனினும் நோய்த் தடுக்கும் விதமாக, கவாத்து செய்தபின் காப்பர் பூஞ்சாணக் கொல்லி அல்லது மீத்தைல் டெமட்டான் ஒருமுறை தெளிப்பது நல்லது.

அறுவடை

குறுகிய கால இரகங்கள் மே – ஜீன் மாதங்களில் அறுவடைக்கு வரும். நீண்ட கால இரகங்கள் ஜீலை – அக்டோபர் மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடும்.

மகசூல்

ஒரு வருடத்திற்கு மரம் ஒன்றில் இருந்து, நாட்டு பேரீ 100 முதல் 120 கிலோ, கீஃபர் மற்றும் நியூ பேரீ 70 முதல் 80 கிலோ வில்லியம் மற்றும் ஜார்கோநெலி 30 முதல் 40 கிலோ மகசூல் கிடைக்கும்.




தற்போதைய செய்திகள்