width:640px height:480px எண்ணெய் வித்துக்கள்

நிலக்கடலை சாகுபடி




வேர்க்கடலை, கச்சான் என்று பொதுவாய் அழைக்கப்படும் நிலக்கடலை, மக்களால் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளைத் தரும் பருப்பு வகை தாவரமாகும்.

தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த தாவரம் இன்று உலக நாடுகள் அனைத்திலும், உண்ணும் உணவில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.

இரகங்கள் :

டி.எம்.வி 7, டி.எம்.வி 10, கோ.3, கோ.ஜி.என் 4, கோ.ஜி.என் 5, ஏ.எல்.ஆர் 3, வி.ஆர்.ஐ2, வி.ஆர்.ஐ3, வி.ஆர்.ஐ.ஜி.என் 5, வி.ஆர்.ஐ 6 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

பருவம்

நிலக்கடலை விதைப்புக்குச் சிறந்த பருவம் ஜுன் – ஜுலை மற்றும் டிசம்பர் – ஜனவரி மாதங்களே ஆகும்.

விதை அளவு

ஒரு ஏக்கருக்கு 50 முதல் 55 கிலோ வரை நிலக்கடலைப் பருப்பு தேவைப்படும்.

மண்

மணற்பாங்கான வண்டல், செம்மண் நிலங்கள் நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்றவை.

நிலம் தயாரித்தல்

கோடை காலத்தில் நிலத்தை நன்றாக குறுக்கு உழவு செய்து, அதிலுள்ள களைகளை நீக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கோடை மழையில் மண்ணில் மழை நீர் சேமிக்கப்படுகிறது அல்லது கோடை மழையில் சணப்பை போன்ற பயிர்களை விதைத்து பூக்கும் தருணத்தில் அதை மடக்கி உழுதும் நிலத்தைத் தயார் செய்து வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் பருவமழை வந்தவுடன் விதைப்புக்கருவி கொண்டு விதைப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

செம்மண் நிலங்களைப் பொறுத்தவரையில் மேல்மண் இறுக்கம் கடலை மகசூலை மிகவும் பாதிக்கிறது.

மேல் மண் இறுக்கத்தை நிவர்த்தி செய்ய எக்டருக்கு 2 டன் சுண்ணாம்பு மற்றும் 12.5 டன் தொழு உரம் அல்லது மக்கிய தென்னை நார்க்கழிவு கடைசி உழவின் போது இட வேண்டும். மேலும் அடிமண் கடின அடுக்கை உடைக்க 3 வருடத்திற்கு ஒருமுறை உளிக்கலப்பை கொண்டு உழ வேண்டும்.

விதையளவு

எக்டருக்கு 125 கிலோ விதையினைப் பயன்படுத்தவேண்டும். பெரிய விதை கொண்ட இரகங்களுக்கு விதை அளவில் 15 சதவிகிதம் கூடுதலாக தேவைப்படும்.

விதைநேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு சூடோமோனாஸ் 10 கிராம் அல்லது டிரைக்கோடெர்மா 4 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் விதை முளைப்புத்திறன் அதிகரிக்கப்படுவதுடன் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. விதை நேர்த்தி மிகவும் கவனமாக செய்ய வேண்டும். ஏனெனில் விதை நேர்த்தி செய்யும் போது விதை உறையில் பாதிப்பு ஏற்பட்டால் முளைப்புத்திறன் பாதிக்கப்படும்.

விதை நேர்த்தி செய்யாவிட்டால், ஏக்கருக்கு ரைசோபியம் 4 பாக்கெட்(800 கிராம்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 4 பாக்கெட் (800 கிராம்) உடன் 10 கிலோ தொழு உரம் மற்றும் 10 கிலோ மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னால் இட வேண்டும்.

விதைத்தல்

நிலக்கடலைக்கு வரிசைக்கு வரிசை 30 செ.மீ, செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளியும் விட்டு விதைக்க வேண்டும். மானாவாரி செம்மண் மற்றும் செம்புரை நிலங்களில் விதைப்புக்கருவி கொண்டு விதைக்கும் போது விதையின் அளவு குறைவதுடன் மண்ணில் ஈரம் குறைவதற்குள் விதைத்து விடலாம். விதைக்கருவியின் மூலம் விதைப்பதால் சரியான பயிர் இடைவெளியை கடைபிடிக்கலாம். இவ்வாறு செய்வதால் களை நிர்வாகம் செய்வதற்கு ஏதுவாகவும் மற்றும் பயிர் வளர்ச்சி சீராகவும் இருக்கும்.

நீர் நிர்வாகம்

விதைக்கும் சமயம் ஈரப்பதம் உள்ளவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் உயிர்த் தண்ணீர் விதைத்த 4-5வது நாள் விட வேண்டும். மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து வாரம் ஒரு முறை நீர் விடவேண்டும்.

உரங்கள்

ரைசோபியம் மற்றும் பாஸ்போபாக்டீரியா உயிர் உரத்தினை ஏக்கருக்கு 4 பாக்கெட் வீதம் அடியுரமாக இடுவதால் தழைச்சத்து மற்றும் மணிச்சத்து நிலக்கடலைக்கு சீராகக் கிடைக்கும்.

ஜிப்சம் இடுதல்

நிலக்கடலை உற்பத்தியில் பயிருக்கு ஜிப்சம் இடுவது மிக அவசியம். ஜிப்சத்தில் சுண்ணாம்புச் சத்தும், கந்தகச் சத்தும் அடங்கி உள்ளன. சுண்ணாம்புச் சத்து காய்கள் திறட்சியாகவும், அதிக எடை உடையதாகவும் உருவாக வழி செய்கிறது. கந்தகச் சத்து நிலக்கடலையில் எண்ணெய்ச் சத்தை அதிகரிக்கிறது. ஒரு ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சத்தை விதைத்த 40-45ம் நாள் இட்டு செடிகளைச் சுற்றி மண் அணைக்க வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

நிலக்கடலையில் அதிக மகசூல் பெற களை கட்டுப்பாடு மிகவும் அவசியம். நிலத்தில் உள்ள பயிர்சத்து வீணாகாமல் தவிர்த்திடவும், களைகள் மூலம் மண், ஈரம் வீரயமாவதைத் தவிர்த்திடவும், பயிர்களுக்கு போதிய சூரிய ஒளி கிடைத்திடவும் மற்றும் பூச்சி நோய்கள் பரவாமல் தடுத்து அதிக விளைச்சல் பெறுவதற்கும் களை கட்டுப்பாடு மிகவும் அவசியமாகிறது. விதைத்த 45 நாட்களுக்குள் களைகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.

 
சிகப்புக் கம்பளிப் புழு

சிகப்புக் கம்பளிப்புழுக்களை கட்டுப்படுத்த குவினால்பாஸ் 2.5 மி.லி, என்.பி.வி.நச்சுயிரி (300 புழுக்களை ஊறவைத்து பெறப்படும் நச்சுயிரிக்கரைசல்) மற்றும் 100 மி.லி ஒட்டும் திரவம் அல்லது ட்ரைட்டான் சேர்த்து 150 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும்.

படைப்புழு அல்லது வெட்டுப்புழு :

படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த ஸ்பைனோசாடு 0.4 மி.லி (அ) புரோப்பனோபாஸ் 2 மி.லி தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்குத் தேவையான நச்சுணவு உருண்டைகளைத் தயார் செய்து பயன்படுத்தலாம். அரிசித்தவிடு 5 கிலோ, வெல்லம் 0.5 கிலோ மற்றும் கார்பரில் (50 சதம்) நனையும் தூள் 0.5 கிலோ இம்மூன்றையும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து (3 லிட்டர்) சிறுசிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும். இந்த நச்சுணவு உருண்டைகளைத் தயார் செய்தவுடன், வயலைச்சுற்றிலும் வரப்பு ஓரங்களிலும், வயலில் தெரியும் வெடிப்பு மற்றும் பொந்துகளிலும் மாலை வேளைகளில் வைத்து புழுக்களைக் கவர்ந்து அழிக்க வேண்டும்.

என்.பி.வி நச்சுயிரியை ஏக்கருக்கு 200 மி.லி என்ற அளவில் வெல்லம் (1.0 கிலோ, ஏக்கர்) மற்றும் டீப்பாலுடன் (100 மி.லி/ஏக்கர்) சேர்த்து 150 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும்.

இலைப்பேன் மற்றும் அசுவினி

இவற்றைக் கட்டுப்படுத்த இமிடாகுளோபிரிட் 0.4 மி.லி. (அ) அசிபேட் 1 கிராம், ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

சுருள் பூச்சி

இதைக் கட்டுப்படுத்த ஸ்பைனோசாடு 0.4 மி.லி, இமிடாகுளோபிரிட் 0.4 மி.லி (அ) டைமெத்தோயேட் 2 மி.லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

வேரழுகல் நோய்

உயிரியல் முறை: ஒரு ஏக்கருக்கு சூடோமோனாஸ் ஃபுளூரசன்ஸ் 1.0 கிலோவுடன் 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் (அ) மணல் இட வேண்டும்.

நோய் தென்படும் இடங்களில் கார்பன்டாசிம் 1 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். புரோப்பனோசோல் 2 கிராம், ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் கலந்து விதைக்கும் முன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

அறுவடை

முதிர்ந்த இலைகள் காய்ந்து விடுதல் மற்றும் மேல்மட்ட இலைகள் மஞ்சளாவதும் முதிர்ச்சியைக் குறிக்கும். கால அளவைப்பொறுத்து பயிர் கண்காணிக்கப்பட வேண்டும். தோராயமாக ஒரு சில செடிகளைப் பிடுங்கி காய்களை உரிக்க வேண்டும். ஓட்டின் உட்புறம் வெள்ளையாக இல்லாமல் பழுப்பு கலந்த கறுப்பு நிறத்தில் இருப்பின் அது முதிர்ச்சி நிலையைக் குறிக்கிறது.

அறுவடைக்கு முன் நீர் பாய்ச்ச வேண்டும். நீர் பாய்ந்த நிலம் சுலபமாக அறுவடைக்கு உதவுகிறது. மண்ணில் போதுமான ஈரப்பதம் இருப்பின் அறுவடைக்கு முன் நீர் பாய்ச்சத் தேவையில்லை. பிடுங்கப்பட்ட செடிகளைக் குவியலாக வைக்கக் கூடாது. ஏனெனில் ஈரமாக உள்ள போது, குறிப்பாகக் கொத்து ரகங்கள் முளைக்க ஆரம்பித்து விடும்.

 

காய்களை நான்கிலிருந்து ஐந்து நாட்கள் வரை வெயிலில் உலர்த்த வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்கள் காய வைப்பது முழுவதுமான காய்தலுக்கு உதவுகிறது. காய்ந்த காய்களுக்குள் ஈரப்பதம் வருவதைத் தவிர்க்க வேண்டும்.

மகசூல்

ஒரு ஏக்கருக்கு 600 கிலோ வரை கிடைக்கும்.




தற்போதைய செய்திகள்