width:583px height:330px எண்ணெய் வித்துக்கள்

எள் சாகுபடி




பின்னர் சீனா, தென்கிழக்கு ஆசியா, அமெரிக்கா, கனடா, நெதர்லேண்டு, துரிக்கி, பர்மா, சூடான், மெக்சிகோ, நைஜீரியா, வெனிஸ்சுலா, உகந்தா, எத்தோப்பியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் எள் பயிரிட ஆரம்பித்தன.

 

தமிழ்நாட்டில் எள் பயிரானது சுமார் 0.74 லட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்பட்டு 0.32 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு எக்டரில் சராசரி மகசூல் 433 கிலோவாகும். உலக அளவில் நல்லெண்ணெயின் மருத்துவ குணங்களை அனைவரும் ஒப்புக்கொண்டிருக்கும் இவ்வேளையில் எள்ளுக்கு நிலவும் சந்தை வாய்ப்பினை பயன்படுத்தி எள் உற்பத்திக்கான உயர் விளைச்சல் தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலம் எள் உற்பத்தியை அதிகரிக்கலாம்.

மானாவாரி:

ஆடிப்பட்டம் (ஜூன் – ஜூலை)டி.எம்.வி.3, டி.எம்.வி.4, டி.எம்.வி.5,டி.எம்.வி.(எஸ்.வி.)7, கோ1, பையூர் 1,வி.ஆர்.ஐ. (எஸ்.வி) 1

கார்த்திகை:

(அக்டோபர் – நவம்பர்)டி.எம்.வி.3, டி.எம்.வி.5, டி.எம்.வி.(எஸ்.வி) 7,வி.ஆர்.ஐ. (எஸ்.வி)2, எஸ்.வி.பி.ஆர்.4

இறவை:

மாசி (பிப்ரவரி – மார்ச்)அல்லது சித்திரை (ஏப்ரல் – மே)டி.எம்.வி.3, டி.எம்.வி.4, டி.எம்.வி.6, வி.ஆர்.ஐ. (எஸ்.வி)1,வி.ஆர்.ஐ (எஸ்.வி)2, எஸ்.வி.பி.ஆர்1, டி.எம்.வி. (எஸ்.வி)7, கோ1, பையூர்

நெல் தரிசு:

மாசி (பிப்ரவரி – மார்ச்)வி.ஆர்.ஐ. (எஸ்.வி)1, டி.எம்.வி.6

மண் வகை

மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் களிமண் போன்ற மண் வகைகள் ஏற்றவை. நீர்தேங்கும் தன்மையுள்ள நிலங்கள் மற்றும் உவர் மண் நிலங்களுக்கு உகந்ததல்ல மண்ணின் சராசரி கார அமில நிலை 6 – 8.0க்குள் இருக்க வேண்டும்.

 

நிலம் தயாரித்தல்

நிலத்தினை கட்டிகள் இல்லாமல் நன்கு உழவு செய்ய வேண்டும். ரோட்டவேட்டர் கொண்டு மண்கட்டிகளை உடைத்து புழுதியாகும் வரை நன்கு உழ வேண்டும். மண்ணில் உள்ள கடினமான மண் அடுக்கை உடைக்க உளிக் கலப்பையினைக் கொண்டு 0.5 மீ ஆழத்தில் இரு செங்குத்தான திசைகளில் உழ வேண்டும். கடைசி உழவிற்கு முன்பு ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் அல்லது மக்கிய தென்னை நார்க்கழிவு இட வேன்டும். பிறகு நிலத்தினை கிடைக்கக்கூடிய நீரின் அளவு மற்றும் நிலச் சரிவினைப் பொறுத்து 10 அல்லது 20 சதுரமீட்டர் கொண்ட பாத்திகளாக பிரிக்க வேண்டும்.

நீர் தேங்குவதைத் தடுக்க நன்கு சமன் படுத்த வேண்டும். நெல் தரிசில் எள் பயிர் சாகுபடி செய்யும் பொழுது நிலத்தினை சரியான ஈரப்பதத்தில் ஒரு முறை உழுது, விதை விதைத்த பிறகு மற்றொரு முறை உழவு செய்து மூட வேண்டும்.

விதையளவு:

ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானது.

 

விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் இராசாயன பூஞ்சாணக்கொல்லி மருந்தினை கலந்து விதை நேர்த்தி செய்யலாம். பிறகு 24 மணி நேரம் கழித்து விதைப்பதற்கு முன்பு ஒரு ஏக்கருக்கு 1 பொட்டலம் அசோஸ்பைரில்லம் மற்றும் 1 பொட்டலம் பாஸ்போபேக்டீரியா உயிர் உரங்களை ஆறிய அரிசி கஞ்சியில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்கலாம். இவ்வாறு விதை நேர்த்தி செய்வதனால் விதை மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். மேலும் பரிந்துரைக்கப்படும் அளவில் 25 சதவீத தழைச்சத்தினைக் குறைக்கலாம்.

 

பயிர் இடைவெளி மற்றும் பயிர் எண்ணிக்கை

வரிசைக்கு வரிசை 30 செ.மீ மற்றும் பயிர்களுக்கிடையிலான இடைவெளி 30 செ.மீ இருக்குமாறு 30 * 30 செ.மீ இடைவெளி இருக்க வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 11 செடிகள் உள்ளவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். விதைத்த 15ம் நாள் செடிக்கு செடி 15 செ.மீ இடைவெளி விட்டு ஒரு முறையும் பிறகு 30ம் நாள் செடிக்கு செடி 30 செ.மீ இடைவெளி விட்டு மறுமுறையும் செடிகளை கலைத்து விடுவது பயிர் எண்ணிக்கையை பராமரிக்க உதவும்.

 

விதைக்கும் முறை

எள் விதை சிறியதாக இருப்பதால் ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் 2 கிலோ விதைகளை 8 கிலோ மணலுடன் கலந்து வரிசியில் நிலத்தின் மேற்பரப்பில் சீராக தூவி விதைக்க வேண்டும். 3 செ.மீ ஆழத்திற்கு மிகாமல் விதைத்து மண் கொண்டு மூட வேண்டும்.

 

ஒருங்கிணைந்த உர நிர்வாகம்

மண் பரிசோதனை பரிந்துரையின் படி உரமிட வேண்டும். அல்லது இறவைக்கு 1 ஏக்கருக்கு 14:9:9 கிலோ தழைச்சத்து (யூரியா 30 கிலோ), மணிச்சத்து (சூப்பர் பாஸ்பேட் 60 கிலோ) மற்றும் சாம்பல் சத்து (8 கிலோ) என்ற அளவில் உரமிட வேண்டும். இறவை மற்றும் மானாவாரி பயிருக்கு முழு அளவு தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை அடி உரமாக இட வேண்டும். ஏக்கருக்கு  4 பொட்டலம் அசோஸ்பைரில்லம் மற்றும் 4 பொட்டலம் பாஸ்போபேக்டீரியா உயிர் உரங்களை 20 கிலோ மணலுடன் கலந்து அடியுரமாக இடலாம். இதனால் கால்பங்கு தழைச்சத்து அளிப்பதை குறைத்துக் கொள்ளலாம்.

ஏக்கருக்கு  2 கிலோ மாங்கனிசு சல்பேட்டை 20 கிலோ மணலுடன் கலந்து நிலத்தில் தூவுவதன் மூலம் மாங்கனீசு பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 5 கிலோ தமிழ்நாடு வேளாண்மைப் பல்கழைக்கழக நுண்ணூட்டக் கலவையினை செறிவூட்டப்பட்ட தொழுஉரமாக மானாவாரி பயிருக்கும் அடியுரமாக இடுவதன் மூலம் பெரும்பாலான நுண்ணூட்டச் சத்துக்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யலாம்.

 

களை நிர்வாகம்

எள் விதைத்த மூன்றாம் நாள் மண்ணில் ஈரம் இருக்கும் தருணத்தில் ஏக்கருக்கு 500 மி.லி அலாக்குளோர் (அ) 800 மி.லி பென்டிமெத்தலின் (அ) 800 மி.லி புளுக்குளோரலின் களைக் கொல்லி மருந்தை 200 லிட்டர் நீரில் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்தால் களைகளைப் பெருமளவு கட்டுப்படுத்தலாம். பிறகு 30 – 35 வது நாளில் ஒரு கைக்களை எடுப்பது அவசியம். களைக்கொல்லி இடாவிட்டால் விதைத்த 15 நாட்கள் கழித்து முதல் முறையும், 35 நாட்கள் கழித்து இரண்டாவது முறையும் கைக்களை எடுத்து களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

 

நீர் நிர்வாகம்

எள்ளின் நீர்த்தேவை சுமார் 300 மி.மீ ஆகும். எள்ளிற்கு 5 அல்லது 6 முறை நீர் பாய்ச்ச வேண்டும். விதைப்பின் பொழுது, 3 நாட்கள் கழித்து உயிர்த் தண்ணீர், 15ம் நாள் ஒருமுறை, பூக்கும் தருவாயில் ஒரு முறை, காய்பிடிக்கும் தருவாயில் ஒருமுறை மற்றும் முதிர்ச்சியடையும் போது ஒருமுறை என ஆறுமுறை நீர்பாய்ச்ச வேண்டும். பூக்கும் பருவம் (30 – 35 வது நாள்), மற்றும் காய்பிடித்து பெருக்கும் பருவம் (45 – 65 நாள்) போன்றவற்றில் கண்டிப்பாக மண்ணில் ஈரம் இருக்க வேண்டும். பூக்கும் தருணத்தில் மழை பெய்தால் பூக்கள் கொட்டிவிடும்.

 

பயிர் ஊக்கி தெளித்தல்

எள் பயிரில் பூப்பிடிக்காமை பிரச்சனையை நிவர்த்தி செய்ய விதைத்த 40ம் நாள் ஏக்கருக்கு 150 மி.லி பிளானோபிக்ஸ் 40 பி.பி.எம். மற்றும் 1 சதம் டி.ஏ.பி கரைசலை கலந்து மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். எள் விதைத்த 30ம் நாள் மற்றும் 50ம் நாள் ஏக்கருக்கு 20 கிராம் சாலிசிலிக் அமிலத்தை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிப்பதன் மூலம் 20 சதம் மகசூலை அதிகரிக்கலாம்.

 

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

தளிர் பிணைக்கும் புழுக்கள் மற்றும் எள் காய் ஈயினைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 400 மி.லி குயினால்பாஸ் 25 இ.சி மருந்தினை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம். அல்லது 2 சதம் வேப்ப எண்ணெய் கரைசல் அல்லது 0.03 சதம் வேம்பு சார்ந்த மருந்துகளை இருமுறை பூக்கும் தருணத்திற்கு முன்பு தெளிக்க வேண்டும்.

எள் காய் துளைப்பானைக் கட்டுப்படுத்த பாசலோன் 4 சதம் (அ) குயினால்பாஸ் 1 சதம் (அ) மாலத்தியான் 5 சதம் தூள்களை ஒரு ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் விதைத்த 25, 35 மற்றும் 60 நாட்களுக்கு பிறகு தூவலாம்.

முடிக் கொத்து பேனினை தவிர்க்க எள் மற்றும் துவரையினை 6:1 என்ற விகிதத்தில் விதைக்கலாம்.

காய் நாவாய் பூச்சியினை ஏக்கருக்கு 200 மி.லி டைகுளோர்வாஸ் 76 டபுள்யூஅஸ்.சீ (அ) 400 கிராம் கார்பரில் 50 டபுள்யூபி மருந்தினை தெளித்து கட்டுப்படுத்தலாம்.

வேரழுகல் நோயினைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 1 கிலோ சூடோமோனாஸ் (அ) டிரைக்கோடெர்மா எதிர் உயிரி பூஞ்சாணக்கொல்லி மருந்தை 20 கிலோ மணலுடன் கலந்து விதைத்த 30ம் நாள் மண்ணில் இடலாம். அல்லது கார்பன்டாசிம் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் என்ற அளவில் கரைத்து செடிக்கு அருகில் ஊற்றலாம்.

ஆல்டர்நேரியா இலைக்கருகல் மற்றும் செர்சோஸ்போரா இலைப்புள்ளி நோய்களை ஏக்கருக்கு 400 கிராம் என்ற அளவில் மேங்கோசெப் மருந்தினை தெளித்து கட்டுப்படுத்தலாம்.

அறுவடை

செடியின் அடி இலைகள் பழுத்து கொட்டிவிடும் மற்றும் செடியின் அடியிலிருந்து மேலாக உள்ள 10வது காயில் உள்ள விதைகள் கருப்பாக இருந்தால் அறுவடை செய்யலாம். அறுவடை செய்த செடியினை வட்ட வடிவில் அடுக்கி 3 நாட்களுக்கு பட்டரை போட வேண்டும். பின்பு செடியினை உலுக்கினால் 70 சதம் விதைகள் கொட்டிவிடும். பின்பு மீண்டும் 1 நாள் வட்ட வடிவமாக வைத்து மீண்டும் விதைகளை பிரித்தல் வேண்டும்.




தற்போதைய செய்திகள்