வேலூரின் காய்கறி, பழ வியாபார மையமான நேதாஜி மார்க்கெட் கரோனா காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டன. அதைத்தொடர்ந்து அங்கிருந்த மொத்த விற்பனை காய்கறி கடைகள் மாங்காய் மண்டி அருகேயும், சில்லரை விற்பனை காய்கறி கடைகள் வெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்திலும் தற்காலிகமாக இயங்கி வருகின்றன.
மொத்த விற்பனை காய்கறி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் லாரிகளில் வருகின்றன.
கடந்த சில நாட்களாக மொத்த விற்பனை காய்கறி மார்க்கெட்டிற்கு மிகக்குறைந்த அளவே தக்காளி லாரிகள் வருகின்றன. அதனால் அதன் விலை உயர்ந்துள்ளது. இதனால், சில்லரை விற்பனை காய்கறி கடைகள், மளிகை கடைகளில் கடந்த ஒரு மாதமாக தக்காளி கிலோ ரூ.40க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அதன் விலை மேலும் அதிகரித்து ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து நேதாஜி மார்க்கெட் காய்கனி வியாபாரிகள் சங்க தலைவர் கூறுகையில், மொத்த விற்பனை காய்கறி மார்க்கெட்டிற்கு கடந்த மாதம் ஆந்திராவில் இருந்து தினமும் 15 லாரிகளில் தக்காளிகள் வந்தன.
தற்போது 5 லாரிகளில் வருகின்றன. ஆந்திராவில் பெய்யும் மழை காரணமாக மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. 25 கிலோ அடங்கிய ஒரு பெட்டி முன்பு ரூ.300 முதல் ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.800 முதல் ரூ.1,000 வரை விற்பனையாகின்றன.
அதனால் இங்கிருந்து தக்காளி வாங்கி செல்லும் சில்லரை காய்கறி, மளிகை கடை வியாபாரிகள் கூடுதலாக ரூ.10 சேர்த்து ரூ.50 முதல் ரூ.60 வரை அதனை விற்பனை செய்கிறார்கள். மற்ற காய்கறிகளின் விலை உயரவில்லை.
