width:868px height:380px செய்திகள்

நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப் புழு தாக்கும் அபாயம்!




இந்தியாவில் நிலக்கடலையானது மிக முக்கியமான எண்ணெய் வித்து பயிராகும். தமிழ்நாட்டில், சேலம், தர்மபுரி, கிரிஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், பெரம்பலூர் ஆகிய வட மாவட்டங்களில் தற்போது பரவலாக பயிரிடப்பட்டுள்ளது.

நிலக்கடலையில், அமாஸ்க்டா அல்பிஸ்ட்ரைக்கா (Amsacta albistriga) என்ற சிவப்பு கம்பளிப் புழுவானது 25 முதல் 90 விழுக்காடு அளவிறிக்கு சேதம் விளைக்கும் மிகவும் மோசமாக பூச்சியின் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தாக்குதலின் அறிகுறிகள் :

இளம் சிவப்பு கம்பளிப் புழுவானது, இலையின் பச்சையத்தை சுரண்டி உண்ணும். நன்கு முதிர்ந்த புழுவானது, இலையின் நரம்பு தவிர்த்து இடைப்பட்ட இலை பகுதியை உண்டு சேதப்படுத்தும்.

அதிகமாக தாக்கப்பட்ட செடிகள், மாடு மேய்ந்தது போல் நுனிக் குருத்து மற்றும் இலைகள் வெட்டப்பட்டு காணப்படும்.

பூச்சியின் அடையாளம்:
• முட்டை: தாய் அந்து பூச்சி, வெண்நிற முட்டையை இலையின் அடிப்பகுதியில் குவியலாக ஈடும்.
• புழு: உடலின் மேற்பரப்பில் நீளமான சிகப்பு கலந்த பழுப்பு நிற முடிகளுடன் கூடிய பழுப்பு நிற புழுக்கள்இருக்கும்.
• கூட்டுப்புழு: பழுப்பு நிற, நீள் கோள வடிவில், நீண்ட நாட்களாக உறக்க நிலையில் மண்ணில் இருக்கும். நல்ல மழையை தொடர்ந்து, உறக்க நிலை மீள் பெற்று தாய் அந்து பூச்சிக்கள் வெளியே வரும்
• அந்துப்பூச்சி: முன் இறகானது பழுப்பு கலந்த வெள்ளை நிறத்தில் சிவப்பு நிற முன் புறக் கோடுகளுடன் காணப்படும், பின் இறகானது வெள்ளை நிறத்தில் கருப்பு நிற புள்ளிகளுடன் காணப்படும்.

பொருளாதார சேத நிலை: எட்டு முட்டை குவியல்கள் / 100 மீட்டர் வரிசை நிலக்கடலை செடிகள்

கட்டுப்படுத்தும் முறை:


• கோடை உழவு செய்வதன் மூலம் கூட்டுப் புழுவானது தரைக்கு மேலே வந்து பறவைகளுக்கு உணவாகும்..
• விளக்குப்பொறியை (1 -3 வீதம்/ ஹெக்டர்) அமைத்து அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்.
• விளக்குப்பொறி வைத்திருக்கும் பகுதியில் முட்டைக் குவியலையும், இளம் புழுக்களை கை களால் சேகரித்து அழிக்கலாம்.
• துவரை மற்றும் தட்டைப்பயிறு ஆகியவற்றை ஊடுப்பயிராக பயிர் செய்து இளம் புழுக்களை கவர்ந்து கட்டுப்படுத்தலாம்.
• வயலைச் சுற்றிலும் 30 செ.மீ நீளம் மற்றும் 25 செ.மீ அகலம் இருக்கும் அளவிற்கு சிறிய அளவில் குழிகள்அமைத்து, படையெடுத்து வரும் புழுக்களை அழிக்கலாம்.
• அமாஸ்கடா அல்பிஸ்ட்ரைக்கா நியுக்ளியஸ் வைரஸ் (Aa NPV) (250 LE/ ஹெக்டர்) கலவையினை ஒட்டும் திரவம் (1மிலி/லி) கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
• மிதைல்டெமெடான் 25 EC- 1 லிட்டர் / ஹெக்டர் அல்லது குயினால்பாஸ் 25 EC – 750 மிலி /ஹெக்டர் என்ற அளவில் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
• குலொரன்ட்ரனலிபுரொல் 18. 5 EC – 150 மிலி / ஹெக்டர் என்ற அளவில் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
• ப்ளுபென்டையமைய்டு (Flubendiamide) 20 WDG 7.5 கி என்ற அளவில் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

மேலும் விவரங்களுக்கு, தஞ்சாவூர், ஆர்விஏஸ் வேளாண்மை கல்லூரி, உதவி பேராசியர்கள் (பூச்சியியல் துறை) முனைவர் செ. சேகர் மற்றும் கு.திருவேங்கடம் ஆகியோரை மின்னஞ்சல்: sekar92s@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.




தற்போதைய செய்திகள்