width:800px height:400px செய்திகள்

வெங்காய ஏற்றுமதிக்கு தடை




அனைத்து ரக வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

அதேவேளையில் நறுக்கப்பட்ட, சீவப்பட்ட மற்றும் பொடி செய்யப்பட்ட வெங்காயங்களை ஏற்றுமதி செய்ய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகம் (DGFT) வெளியிட்ட அறிவிக்கையில், அனைத்து ரக வெங்காய ஏற்றுமதிக்கும் உடனடியாக தடை அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் ரோஸ் வெங்காயம் மற்றும் கிருஷ்ணாபுரம் வெங்காயங்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ரக வெங்காயங்களை ஏற்றுமதி செய்ய தற்போது தடையில்லை.

வெங்காய விலைகள் அதிகரித்து வருவதாலும், உள்நாட்டுச் சந்தைகளில் பற்றாக்குறை இருப்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தப் பற்றாக்குறை இந்தக் காலத்தில் வழக்கமாக காணக்கூடிய ஒன்று தான் என்ற போதும், கொரோனா காலத்தில் கடந்த சில மாதங்களில் அதிகமான அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டதாக வர்த்தக அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நடப்பு 2020-21ம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலத்தில் 198 மில்லியன் டாலர் அளவுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டது. முந்தைய 2019-20ம் முழு நிதியாண்டிலேயே 440 மில்லியன் டாலர் அளவுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.

ஐக்கிய அமீரகம், வங்கதேசம், மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் அதிகளவில் இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்கின்றன.

கடந்த ஆண்டில், இந்தியாவில் வெங்காயத்தின் விலை கணிசமாக அதிகரித்த நிலையில், மத்திய அரசு தடைவிதித்தது. அத்துடன் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய முக்கிய வெங்காயம் விளையும் மாநிலங்களில் அதிக மழைப்பொழிவால் ஏற்பட்ட வெள்ளத்தால் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும் மத்திய அரசு குறைந்த பட்ச ஏற்றுமதி விலையாக 850 டாலர் நிர்ணயம் செய்யப்பட்டது.

குறைந்தபட்ச ஏற்றுமதி விலையானது, கடந்த மார்ச் மாதத்தில் நீக்கம் செய்யப்பட்டு, வெங்காயங்கள் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மார்ச்சுக்குப் பின்பு உள்நாட்டில் விற்பனை சரிவடைந்த நிலையில் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்ததை அடுத்து தற்போது மீண்டும் வெங்காயத்திற்கு தடை விதிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.




தற்போதைய செய்திகள்