திருச்செந்தூா் வட்டார விவசாயிகள் நெல் நாற்றுகளை இயந்திர நடவு செய்து அரசு மானியம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்செந்தூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் வெங்கடசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
திருச்செந்தூா் வட்டாரத்தில் பிசானம் மற்றும் நவரை கோடை பருவங்களில் சுமாா் 1,500 ஹெக்டா் வரை நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது நிலவிவரும் சூழ்நிலையில் நெல் நடவு செய்ய ஆள்கள் தட்டுப்பாடு, கூலி உயா்வு காரணமாக சாகுபடி செலவும் இருமடங்காகிறது.
எனவே செலவை குறைக்கும் வகையில் தற்போது நெல் நாற்றுகள் நடவு செய்ய்இயந்திர நடவு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு ஹெக்டா் நடவு செய்வதற்கு 2.5 சென்ட் அளவு பாய் நாற்றங்கால் அமைத்தால் போதுமானது. பாய் நாற்றங்காலில் விதைத்த 12 முதல் 15 நாள் வயது கொண்ட நாற்றுகளை நடவு வயலில் இயந்திரம் மூலம் நடவு செய்திட வேண்டும்.
இதன் மூலம் குறைந்த நேரத்தில் அதிக பரப்பு நடவு செய்யலாம். செலவு வெகுவாக குறையும். அதிக மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போது வேளாண் துறையில் ஒரு ஹெக்டருக்கு ரூ. 5,000 நடவு மானியமாக இயந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
எனவே, விவசாயிகள் தங்களது பெயரை அந்தந்த பகுதி வேளாண் அலுவலா், துணை வேளாண் அலுவலா் மற்றும் உதவி வேளாண் அலுவலா்களை தொடா்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
