வாழைப்பழம் தொடங்கி இலை, தண்டு என பலவகைகளில் வருவாய் கொடுக்கும் வாழை சாகுபடியில் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அமராவதி பழைய ஆயக்கட்டு விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது : வாழை சாகுபடி ஒரு ஆண்டு பயிராகும். இதில் பழங்கள் பெறுவதற்கு சாகுபடி பருவம் முழுவதும் காத்திருக்க வேண்டும். ஆனால் வாழை இலை விற்பனையை அடிப்படையாகக்கொண்டு சாகுபடி செய்யும் போது நடவு செய்து 5 மாதங்களில் வாழை இலைகள் உற்பத்தியாகும். இந்த காலகட்டத்திலிருந்து இலை அறுவடை செய்யத் தொடங்கலாம். ஒரு ஏக்கர் பரப்பில் அதிகப்பட்சமாக 1,500 வாழை நடவு செய்யலாம். இந்த சாகுபடி பரப்பில் இருந்து தினசரி ஆயிரம் இலைகள் வரை அறுவடை செய்ய முடியும். பூவன், கற்பூர வள்ளி, மொந்தன், கதலி, சக்கை, வயல் உள்ளிட்ட பல வகையான பழங்களை கொடுக்கும் வாழைகள் உள்ளன. பல வகையில் விவசாயிகளுக்கு வருவாய் தரக்கூடிய சாகுபடியாக வாழை உள்ளது என்றனர்.
