இஞ்சி கடல்மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரம் வரையுள்ள வெப்ப மற்றும் ஈரப்பதமுள்ள உஷ்ண மண்டலப்பகுதிகளில் நன்கு வளரும். பொதுவாக மானாவாரி பயிராகவே சாகுபடி செய்யப்படுகிறது. பயிர் முளைத்துவரும்போது மிதமான மழையளவும் அதன் வளர்ச்சிப்பருவத்தில் அதிக மழையளவு மற்றும் அதிக மழைநாட்கள் மிகவும் அவசியம். நல்ல வடிகால் வசதியுள்ள அங்ககப் பொருட்கள் நிறைந்த மணல், களிமண் கலந்த குறுமண், சிவப்பு குறுமண் அல்லது லேட்டரைட் குறுமண் நிலங்களில் நன்கு வளரும்.
இனப்பெருக்கம்
இஞ்சி கரணைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. ஒரு எக்டருக்கு 1500-1800 கிலோ விதை இஞ்சி கரணைகள் தேவைப்படும்.
பருவம்
இந்தியாவில் மேற்கு கடலோர பகுதிகளில் இஞ்சி மே மாதங்களிலும், வடகிழக்கு மாநிலங்களில் ஏப்ரல் மாதங்களிலும் இறவைப்பயிராக சாகுபடி செய்யும்போது பிப்ரவரி மாத இடையில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் பயிரிடப்பட்டு வருகிறது.
வகைகள்
சுக்கு உண்டாக்குவதற்கேற்ற வகைகள் – மாரன், நதியா, கரக்கால். அதிக ஒலியோ ரெசினுக்கு – ஏர்நாடு, செர்நாடு, சீனா, ரியோடிஜெனிரா. அதிக எண்ணெய்க்கு – மாரன், கரக்கால். பச்சை இஞ்சி – சீனா, ரியோ-டி-ஜெனிரா, வயநாடு, லோக்கல், மாறன் வரதா.
இஞ்சி பயிரை சாகுபடி செய்ய பிப்ரவரி-மார்ச் மாதம் கோடைக்கால மழை கிடைத்தவுடன் நிலத்தை 4-5 முறை நன்றாக உழுது தயார் செய்ய வேண்டும். நிலத்தை நன்றாக கொத்தி பதமாக்க வேண்டும். அதன்பின் 15 செ.மீ. உயரம், 1 மீட்டர் அகலம் மற்றும் தேவையான நீளம் வைத்து பாத்திகளுக்கிடையே 40 முதல் 50 செ.மீ. இடைவெளியில் பார் அல்லது மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும்.
நடவு
கோடைமழை கிடைத்தவுடனே இஞ்சி நடவு செய்ய வேண்டும். 20-25 கிராம் எடை மற்றும் 2.5 -5 செ.மீ. நீளம் உள்ள கரணைத்துண்டுகளைப் பாத்திகளில் 50 செ.மீ. x 50 செ.மீ (அ) 25 செ.மீ. x 25 செ.மீ. இடைவெளி அமைத்து சிறு குழிகளில் நடுதல் வேண்டும். திடகாத்திரமான ஒரு மொட்டாவது மேல்நோக்கி இருக்குமாறு நடவேண்டும்.
மாங்கோசெப் 0.3 சதம் மற்றும் மாலத்தியான் 0.1 சதம் ஆகிய மருந்துக்கலவையில் 30 நிமிடம் கரணைகளை ஊறவைத்திருக்க வேண்டும். பாக்டீரியா வாடல் நோய் இருக்குமானால் விதைக்கரணைகளை 200 பிபிஎம் ஸ்ட்ரெப்டோசைக்ளின் மருந்துக்கரைசலில் (30 லிட்டர் தண்ணீரில் 6 கிராம் மருந்து) விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
உரமிடுதல்
ஒரு எக்டருக்கு தொழு உரம் 25 முதல் 30 டன் மற்றும் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் முறையே 75, 50 மற்றும் 25 கிலோ இடவேண்டும். முழு மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்தை அடியுரமாக இடலாம். தழைச்சத்தை கரணைகளை விதைத்த 45வது நாளிலும் மறு பாதியை சாம்பல்சத்தும் சேர்த்து 90வது நாளிலும் மேலுரமாக இடவேண்டும்.
மூடாக்கு
நட்டவுடன் பாத்தி களில் ஒரு எக்டருக்கு 12.5 டன் பச்சை இலைகளை அடர்த்தியாக இட வேண்டும். மீண்டும் நட்ட 40 மற்றும் 90வது நாட்களில் 15 டன் அளவில் இடவேண்டும். இடையில்கைக்களை எடுப்பு செய்ய வேண்டும். நட்ட 5 மற்றும் 6வது மாதங்களில் மீண்டும் களை எடுக்க வேண்டும். நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அறுவடை, மகசூல்: இஞ்சி காய்கறிக்காக பயன்படுத்துவதாக இருந்தால் ஆறு மாதத்தில் அறுவடை செய்ய வேண்டும். சுக்கு (உலர்ந்த இஞ்சி) தயாரிக்க பொதுவாக 245 முதல் 260 நாட்களில் (இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்போது) அறுவடை செய்ய வேண்டும். சுத்தம் செய்ய கரணைகளை நீரில் கழுவி கூர்மையான மூங்கில் கொண்டு தோலை அகற்றி சுத்தமான தரையில் சீராக பரப்பி 3-9 நாட்கள் காயவைக்க வேண்டும். அவ்வப்போது அவற்றை புரட்டிவிட வேண்டும். ஒட்டிக்கொண்டிருக்கும் தோலை அகற்றி பின் பைகளில் நிரப்பி குளிரான இடத்தில் சேமிக்க வேண்டும். ஒரு எக்டருக்கு 20-25 டன்கள் பச்சை இஞ்சி மகசூலாகக் கிடைக்கும்.
நோய்கள்
கரணை அழுகல்
மான்கோசெப் 0.3 சதம் கரைசலில் அறுவடை செய்தவுடன் விதைக்கரணைகளை வைத்திருந்து நடவேண்டும்.
ஆதாரம் :http://ta.vikaspedia.in/
