width:px height:px காய்கறிகள்

சாம்பல் பூசணி சாகுபடி




சாம்பல் பூசணி கொடிவகை காய்கறிகளில் ஒன்று.

பூசணிக்காயின் தாயகம் வடக்கு மெக்ஸிகோவும், தென் அமெரிக்காவாகும்.

பறங்கிக்காய் போன்ற தோற்றத்தில் சாம்பல் நிறத்தில் காணப்படுவது சாம்பல் பூசணியாகும்.

கோடைக்காலத்தில் உடலில் உண்டாகும் வெப்பத்தினை பூசணிக்காய் தணிக்கிறது. அதனால் இதைக் கோடைப் பூசணி என்றும் வழங்குவார்கள்

சாம்பல் பூசணி எப்படி பயிரிடுவது…?

இரகங்கள்

கோ 1 மற்றும் கோ 2, டயமண்ட் பி.எஸ்.எஸ்.603 ஆகிய இரகங்கள் உள்ளன.

பருவம்

ஜீலை மற்றும் ஜனவரி மாதங்கள் பயிரிட ஏற்றவை.

மண்

நல்ல ஆழமான இருமண்பாட்டு நிலத்தில் நன்கு வளரும். மானாவாரியில் பயிர் செய்ய களிமண் கலந்த நிலம் சிறந்தது. சாம்பல் பூசணியின் வளர்ச்சிக்கு அதிக குளிரில்லாத ஓரளவு வெப்பமான பருவநிலை மிகவும் உகந்தது. சிறந்த மகசூலுக்கு கார அமிலத் தன்மை 6.5-7.5 இருத்தல் வேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை 3 முதல் 4 முறை நன்கு உழவு செய்த பின்னர் 2 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீ அகலமுள்ள நீண்ட வாய்க்கால்கள் அமைக்கவேண்டும். இந்த வாய்க்கால்களை ஒட்டி 1.5 மீட்டர் இடைவெளியில் 30 செ.மீ நீள, அகல, ஆழ அளவு குழிகளை எடுக்கவேண்டும். இதில் அடியுரமாக தொழு உரத்தை மேல் மண்ணுடன் கலந்து குழிகளில் இட்டு மூடவேண்டும்.

விதையளவு

ஒரு எக்டருக்கு 2.5 கிலோ விதைகள் தேவைப்படும்.

விதை நேர்த்தி

விதைகளை விதைக்கும் முன்னர், ஒரு கிலோ விதைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் அரைமணி நேரம் ஊறவைத்துப் பின்னர் ஆறு நாட்கள் கழித்து விதைக்கவேண்டும். இதனால் முளைக்கும் திறன் மேம்படும்.

விதைத்தல்

தயார் செய்துள்ள குழிகளில் வரிசைக்கு வரிசை இரண்டு மீட்டர், செடிக்குச் செடி 1.5 மீட்டர் இடைவெளியில் (2 x 1.5 மீட்டர்) 3-6 விதைகளை ஊன்ற வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைகளை விதைப்பதற்கு முன் குழிகளுக்கு நீர் பாய்ச்சவேண்டும். விதை விதைத்த அடுத்த நாள் கண்டிப்பாக நீர் ஊற்றவேண்டும். பிறகு மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் ஊற்றவேண்டும். முளைப்புத் திறன் வந்தவுடன் வாய்க்கால்களின் மூலம் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.

சாம்பல் பூசணி உரங்கள்:

குழி ஒன்றுக்கு 1 கிலோ தொழு உரம் மற்றும் கலப்பு உரம் 100 கிராம் இட்டு நீர்ப்பாய்ச்சவேண்டும். 30 நாட்கள் கழித்து ஒரு குழிக்கு 10 கிராம் யூரியா என்ற அளவில் மேலுரம் இடவேண்டும்.

வளர்ச்சி ஊக்கிகள்

விளைச்சல் அதிகரிக்க விதைத்த 15ம் நாளில் 10 லிட்டர் நீருக்கு 2.5 மில்லி என்ற அளவில் எதிரில் என்னும் வளர்ச்சி ஊக்கியினை நான்கு முறை, ஒரு வார கால இடைவெளியில் தெளிக்கவேண்டும். இதனால் கொடிகளில் பெண் பூக்கள் அதிகம் தோன்றி, அதிகக் காய்கள் பிடித்து விளைச்சல் அதிகரிக்கும்.

சாம்பல் பூசணி பாதுகாப்பு முறைகள்:

களை நிர்வாகம்

செடிகளைச் சுற்றி 15 நாட்களுக்கு ஒரு முறை களைக்கொத்தினால் களை நீக்கம் செய்யவேண்டும். செடிகள் முளைத்தவுடன் 3 செடிகளை மட்டும் வைத்துவிட்டு மற்ற செடிகளை நீக்கிவிடவேண்டும்.

பயிர் பாதுகாப்பு

வண்டு தாக்குதல்

பூசணியில் தோன்றும் வண்டுகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 1 மில்லி அல்லது டைமெத்தோயேட்ட 1 மில்லி அல்லது மீதைல் டெமட்டான் 1 மில்லி இவற்றுள் ஏதேனும் ஒன்றுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.

பழ ஈக்கள்

பழ ஈக்களை கட்டுப்படுத்த மாலத்தியான் 1 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

சாம்பல் நோய்

சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த கார்பன்டாசிம் 0.1 சதம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை

காய்கள் முற்றிய நிலையை காய்களின் மேல் பரப்பில் உருவாகும் சாம்பல் பொருட்கள் உதிரத் தொடங்குவதிலிருந்து கண்டுபிடிக்கலாம். பூசணி விதைத்த 90ம் நாளிலிருந்து காய்களை அறுவடை செய்யலாம்.

மகசூல்

சாதாரண வெப்பநிலையில் காய்களை நல்ல காற்றோட்டமான அறைகளில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்காமல் இடைவெளியிட்டு சேமிப்பதன் மூலம் சுமார் 4லிருந்து 5 மாதங்கள் வரை பாதுகாக்கலாம். ஏக்கருக்கு 10 டன் பழங்கள் வரை கிடைக்கும்.

 




தற்போதைய செய்திகள்