width:px height:px காய்கறிகள்

முட்டைகோஸ் சாகுபடி !!




நாலு பேர் கூட வீட்டிற்கு வந்து விட்டாலோ, பெரியக் கூட்டத்திற்கு சமைக்க வேண்டும் என்றாலோ விரைவில், எளிதில் ஆகும் பொரியலோ, கூட்டோ எது என்றால் முதலில் நினைவுக்கு வந்து நிற்கும் ‘காய்’ முட்டைக்கோசு தான். விரைவில் நறுக்கி அதிவிரைவில் சமைத்துப் பரிமாற ஏற்றக் காய் ‘முட்டைகோசு’. சத்துள்ள, மருத்துவ

குணமுடைய முட்டைக்கோஸ் கீரை வகைத் தாவரம்தான். எந்த பந்தியிலும் விருந்திலும், வீட்டிலும் தவறாமல் இடம் பிடிக்கும் முட்டைக் கோஸ் ஏனோ உணவு சுவைஞர்களின் மனதில் இரண்டாம் தர இடத்திலேயே இருந்து வருகின்றது. அதற்கு இரண்டு காரணங்கள்.

முதலாவது, அதன் குறைந்த விலை. முட்டைக்கோசு எப்போதும் நிதானமான விலையிலேயே விற்பனையாகி வரும் காய். ஒருபோதும் விலை உயர்ந்த காய்களின் வரிசையில் இருப்பதில்லை. இரண்டாவது முட்டைக்கோஸிலிருந்து வருகின்ற ஒருவிதமான மணம். இந்த மணத்தையும் பெரும்பாலோர் விரும்புவதில்லை. 

ஆனாலும் கூட உற்பத்தியிலும் விற்பனையிலும் சக்கைப் போடு போடும் காய் முட்டைகோஸுதான் என்பதில் இரண்டாம் கருத்து இல்லை. ’பிராசிகாசியா’ என்கின்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்த முட்டைக்கோசு ஆரம்ப காலத்தில் ’பிராசிகா ஒலிரேசியா’ என்கின்ற காட்டுவகைத் தாவரமாக இருந்தது.

முட்டைகோஸ் எப்படி பயிரிடுவது…?

இரகங்கள் :
மலைப்பகுதி ரகங்கள்

செப்டம்பர் எக்லிப்ஸ், பூசா ஒண்டர், பிரைடு ஆஃப் இந்தியா, ஏர்லி ஒண்டர், பூசா ட்ரம்ஹெட், ஓ.எஸ் இராஸ் போன்றவை மலைப் பகுதிக்கான இரகங்கள் ஆகும்.

சமவெளி பகுதி இரகங்கள்

ஏர்லி ஆட்டம் ஜெயண்ட், லார்ஜ் சாலிட், லேட் ட்ரம்ஹெட், கோல்டன் ஏக்கர், ஜெயின், மகாராணி போன்ற ரகங்கள் சமவெளியில் பயிரிட ஏற்றவை.

மண்

இது பொதுவாக குளிர் கால பருவங்களில் பயிரிடப்படுகிறது. சமவெளி பகுதிகளில் இது குளிர்காலப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. வடிகால் வசதி மிகவும் அவசியம். வண்டல், செம்மண் நிலங்களிலும் நன்றாக வளரும். மண்ணின் கார அமிலத்தன்மை 5.5 முதல் 6.5 வரை உள்ள நிலங்கள் ஏற்றவை.

பருவம்

மலைப்பகுதி: ஜனவரி-பிப்ரவரி, ஜீலை-ஆகஸ்ட் மாதங்கள் ஏற்றது. சமவெளிப்பகுதி: ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் சாகுபடி செய்யலாம்.

விதையளவு

ஒரு எக்டருக்கு 650 கிராம் விதைகள் தேவைப்படும்.

நாற்றங்கால்

நாற்றங்கால் போடுவதற்கு 100 சதுர அடி நிலம் இருந்தாலே போதுமானது. 15 செ.மீ. உயரம், 1 மீ அகலம், தேவையான அளவு நீளம் கொண்டு விதைப்படுக்கையை உருவாக்கலாம். 2 கிலோ தொழு உரம், 200 கிராம் மண்புழு உரம், 40 கிராம் வி.ஏ.எம் போன்றவற்றை ஒரு சதுர அடிக்கு அளிக்க வேண்டும். விதைப் படுக்கைகளில் 10 செ.மீ இடைவெளி விட்டு விதைகளை விதைக்க வேண்டும் .

நிலம் தயாரித்தல்

நிலத்தை பண்பட உழ வேண்டும். மலைப்பகுதிகளில் 40 செ.மீ. இடைவெளி விட்டு குழி தோண்ட வேண்டும். சமவெளிப்பகுதிகளில் 45 செ.மீ அளவுள்ள பார் அமைக்க வேண்டும்.

விதைத்தல்

மலைப்பகுதிகளுக்கு 40X40 செ.மீ இடைவெளியிலும், சமவெளிப்பகுதிகளுக்கு 45X30 செ.மீ இடைவெளியிலும் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

தொடர்ந்து மண் ஈரப்பதமாக இருக்குமாறு பாசனம் செய்ய வேண்டும்.

முட்டைகோஸ் உரங்கள்:

மலைப்பகுதிகளுக்கு அடியுரமாக தலா 90 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து உரங்களை அளிக்க வேண்டும். மேலுரமாக நட்ட 30-45 நாட்கள் கழித்து தலா 45 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து உரங்களை அளிக்க வேண்டும்.

சமவெளிப்பகுதிகளுக்கு அடியுரமாக 50 கிலோ தழைச்சத்து, 125 கிலோ மணிச்சத்து மற்றும் 22 சாம்பல் சத்து உரங்களை அளிக்க வேண்டும். மேலுரமாக நட்ட 30-45 நாட்கள் கழித்து 50 கிலோ தழைச்சத்து உரங்களை அளிக்க வேண்டும்.

 

பஞ்சகாவ்யாவை (3%) பயிரிட்ட ஒரு மாதம் கழித்து 10 நாட்கள் இடைவெளியில் தழைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும். வெர்மிவாஷ் 10 சதவிகிதம் பயிரிட்ட ஒரு மாதம் கழித்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

பயிரிட்ட பின் ஆழமாக தோண்டுவது மற்றும் களை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

முட்டைகோஸ் பாதுகாப்பு முறைகள்:

களை நிர்வாகம்

செடிகள் வளரும் பருவத்தில் களை இல்லாமல் பராமரிக்க வேண்டும்.

வெட்டுப் புழுக்கள்

விளக்குப் பொறியை கோடைக் காலத்தில் வயலில் பொருத்துவதால் தாய் அந்துப் பூச்சியை அழிக்கலாம். பைரித்ரம் கொல்லி, கோதுமைத் தவிடு, கரும்பு சர்க்கரை (2:1:1) என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்தலாம்.

அசுவினிகள்

வேப்ப எண்ணெய் 3% தெளிக்க வேண்டும். வேப்ப இலை சாற்றை 10% பயிரிட்ட 45, 60, 75 வது நாளில் தெளிக்கலாம். இனக்கவர்ச்சி பொறியை ஒரு எக்டருக்கு 20 என்ற எண்ணிக்கையில் வயலில் பொருத்தலாம்.

வேர்முடிச்சு நோய்

நோயற்ற விதை/நாற்றுக்களை தேர்ந்தெடுக்க வேண்டும். சூடோமோனஸ் ப்ளுரோசென்ஸ் ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் என்ற அளவில் கலந்து நாற்றுக்களை நனைத்து விதை நேர்த்தி செய்யலாம்.

டோலமைட் ஒரு எக்டருக்கு 10 கிலோ என்ற அளவில் அளிப்பதால் மண்ணின் கார அமிலத் தன்மையை அதிகரிக்கலாம்.

இலைப்புள்ளி நோய்

5% மஞ்சூரியன் தேயிலைச் சாற்றை பயிரிட்ட ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு மாத இடைவெளி விட்டு 3 முறை தெளிக்க வேண்டும். பஞ்சகாவ்யா 3 சதவிகிதம் பயிரிட்ட ஒரு மாதம் கழித்து 10 நாட்கள் இடைவெளி விட்டு தழைத் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்.

இலைக் கருகல் நோய்

200 கிராம் அக்ரி ஹோட்ரா சாம்பலை ஒரு லிட்டர் மாட்டுக் கோமியத்தில் கரைத்து 15 நாட்கள் ஊற வைத்து, 10 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். விதைத்த ஒரு மாதத்திலிருந்து ஒரு மாத இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.

கருப்பு அழுகல் நோய்

கருப்பு அழுகல் நோயை கட்டுப்படுத்த ஸ்டரப்டோமைசின் 100 பிபி.எப் பயிரிட்ட பிறகு 2 முறை தெளிக்க வேண்டும்.

அறுவடை

நட்ட 75 வது நாளில் அறுவடைக்கு வந்து விடும். கடினமான இலைகள் வளர்ந்தால் பயிர் முற்றிவிட்டதற்கான அறிகுறி ஆகும். ஒன்று அல்லது இரண்டு முற்றிய இலைகளுடன் அறுவடை செய்யவேண்டும். 120 நாட்களில் சுமார் எட்டு முறை வளர்ச்சியடைந்த முட்டைக்கோசுகளைப் பறிக்கலாம். முட்டைக்கோஸ் நன்றாக வளர்ச்சி பெற்று முற்றாமல் இருக்கும் தருவாயில் அறுவடை செய்யவேண்டும்.

மகசூல்

மலைப்பகுதிகளில் 150 நாட்களில் ஒரு எக்டருக்கு 70-80 டன்கள் கிடைக்கும். சமவெளிப்பகுதிகளில் 120 நாட்களில் ஒரு எக்டருக்கு 25-35 டன்கள் கிடைக்கும்.

 




தற்போதைய செய்திகள்